×

அதியமான்கோட்டத்தில் நடுகற்கள் அகழ் வைப்பகம் கட்டுமான பணிகள் தீவிரம்

*ரூ.4.25 கோடியில் நடக்கிறது

தர்மபுரி : தர்மபுரி அதியமான் கோட்டத்தில் ரூ.4.25 கோடியில் நடுகற்கள் அகழ் வைப்பகம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தொல்லியல் பொருட்கள் அதிக அளவில் கிடைத்த பகுதிகளில் ஒன்றாக, தர்மபுரி மாவட்டம் உள்ளது.

இங்கு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்கள், பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளன. இதே போல், பல்வேறு நூற்றாண்டுகளை சேர்ந்த நடுகற்களும் பரவலாக கிடைத்துள்ளன.

தொல்லியல் சார்ந்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்கும் பகுதியாக, தர்மபுரி மாவட்டம் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் வரலாறு கி.மு. 5ஆயிரம் முதல் அதாவது புதிய கற்காலம் முதல் தொடங்குகிறது. பண்டைய காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள், சமுதாயத்தின் நன்மைக்காக, உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்காக நடுகற்கள் அமைக்கும் வழக்கம் இருந்துள்ளது.

அவ்வீரர்கள் அப்பகுதி மக்களைக் கொடிய விலங்குகளிலிருந்தும், பிற பழங்குடியினரிடமிருந்தும் காத்து வந்துள்ளனர். அவர்களுக்காக எழுப்பப்பட்டவை வீரக்கற்கள் அல்லது நினைவுக் கற்கள் எனப்பட்டன. அதிக அளவிலான நடுகற்கள் இப்பகுதியில் தான் காணப்படுகின்றன.

ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு நடுகல்லாவது காணப்படுகிறது. இந்நடுகற்கள் கி.பி 5ம் நூற்றாண்டு முதல் கி.பி 17ம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தை சார்ந்தவையாகும்.

காட்சிப்பொருட்களாக, புதிய கற்கால கருவிகள், பெருங்கற்கால பொருட்கள், கத்தி, குறுவாள், ஈமத் தொட்டிகள், தாழிகள், மூன்று கால்கள் மற்றும் ஐந்து கால்களை உடைய சாடிகள், துர்க்கை மற்றும் சமண சமய, புத்த சமயச் சிற்பங்கள், சுடுமண்ணால் ஆன உருவங்கள், விளக்குகள் மற்றும் குழாய்கள், காசுகள், பதக்கங்கள், பீரங்கிகள், மரப்பொருட்கள், செப்புப் பொருட்கள், இரும்புப் பொருட்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் தர்மபுரி தொல்லியல் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த தொல்லியல் அருங்காட்சியகத்தில், 25க்கும் மேற்பட்ட வீரக்கற்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தர்மபுரி டவுன் பஸ் நிலையம் அருகே தொல்லியல் அருங்காட்சியகம், கடந்த 1979ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. நடுகற்கள் அகழ் வைப்பகமாக பெயர் மாற்றம் செய்து, அங்கேயே இயங்கி வருகிறது.

வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால், அரசு கட்டிடத்திற்கு பாதுகாப்பாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு அதியமான்கோட்டையில் உள்ள அதியமான் கோட்ட வளாகத்தில் நடுகற்கள் அகழ் வைப்பகம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: அதியமான் கோட்ட வளாகத்தில் சுமார் 50 சென்ட் பரப்பளவில் நடுகற்கள் அகழ் வைப்பகம் அமைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரூ.4.25 கோடியில் இந்த அகழ் வைப்பகம் அமைக்கப் படுகிறது.

அதிநவீன வசதிகளுடன் அகழ் வைப்பகம் பயன்பாட்டிற்கு வரும்போது, இந்த மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்லியல் பொருட்களோடு, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ள வரலாற்று பொருட்களையும் பாதுகாத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் மூலம் பொதுமக்கள் இந்த பகுதியின் தொல்லியல் சிறப்புகளை முழுமையாக அறிந்து கொள்ள வாய்ப்பு உருவாகும். மாணவ, மாணவிகள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் பயன்படும். தர்மபுரி மாவட்டம் பங்குநத்தம் பகுதியில், 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வட்டங்கள் இருக்கும் பகுதி தொல்லியல் சுற்றுலா மையமாக மேம்படுத்தப்படுகிறது.

இங்கு சுற்றுச்சுவர், குடிநீர் வசதி, அணுகு சாலை, கழிப்பிட வசதி, மின்விளக்குகள் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Dharmapuri ,Dharmapuri Adiyaman Fort ,Dharmapuri district ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற...