மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி அரசமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும்: செயல்பட விடாமல் ஒன்றிய அரசு நெருக்கடி, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய பாஜ அரசு கபளீகரம் செய்யும் சூழலில், ஆளுநர்கள் மூலமாக மாநில அரசுகளைச் செயல்பட விடாமல் தடுக்கும் நிலையில், இந்தித் திணிப்பின் மூலமாக, நிதி நெருக்கடிகளின் மூலமாக, தொகுதி மறுவரையறை என்ற சதியால், ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாடு அனுபவித்து வரும் நெருக்கடிகளில் இருந்து மீள ஒரே மருந்து மாநில சுயாட்சிதான். அதனை அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலமாக மட்டுமே அடைய முடியும், என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழக சட்டமன்ற பேரவையில், ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலை குழுவின் அறிக்கையின் முதல் பகுதியை முன்வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நம்மையெல்லாம் ஆளாக்கிய அண்ணா, தன்னுடைய இறுதி உயில் போல எழுதியதுதான் மாநில சுயாட்சி கொள்கை. அவருடைய மறைவுக்கு பிறகு கலைஞர், “மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி” என்பதை ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றாக வடித்துத் தந்தார். அதனை முழுமுதல் கொள்கையாக ஏற்றுக்கொண்டுள்ள திமுக ஆட்சியானது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல;

இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து, இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் மாபெரும் முன்னெடுப்பை செய்ய தொடங்கும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நாள்தான் இந்த நாள். அண்ணாவின் தம்பியாக, கலைஞரின் உடன்பிறப்பாக, ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலை குழுவின் அறிக்கையின் முதல் பகுதியை இம்மாமன்றத்தில் வைக்க இருக்கிறோம். ஒரு மாநிலமாக, நம் மக்கள் காணும் கனவுகளை முழுமையாக நிறைவேற்றும் அளவிற்கு நம்மிடம் அதிகாரங்கள் இல்லை.

ஏனென்றால், மாநில உரிமைகளை வழங்கும் ஓர் ஒன்றிய அரசு அமையவில்லை. இருக்கின்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டுதான் சமூகநீதியில், கல்வியில், சுகாதாரத்தில், பொருளாதாரத்தில், உள்கட்டமைப்பு வசதிகளில் முன்னேறி வருகிறோம். நிதி உரிமை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு நாம் இன்னமும் கடுமையாக போராட வேண்டிய சூழல்தான் உள்ளது. எனவே, எல்லா அதிகாரமும் கொண்டவைகளாக மாநில அரசுகளை மாற்றும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிக்கும் சட்டமுன்னெடுப்புகளை நாம் தொடங்கக்கூடிய நாள்தான், இன்றைய நாள்.

அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் வைத்துள்ள ஒன்றிய அரசு, அவற்றை எதேச்சாதிகார மனப்பான்மையோடு பயன்படுத்துவதோடு மாநில அரசுகளையும் மதிப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மாநில அரசுகள் ஒன்றிய அரசின் தயவை எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றன. இன்னும் எத்தனை காலத்துக்குதான் அவர்கள் கொடுக்கும் இடத்திலும், நாம் வாங்கும் இடத்திலும் இருப்பது?. இந்த நிலை மாற வேண்டும். இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நம்முடைய நோக்கத்துக்கான விடைதான், ஒன்றிய மாநில உறவுகள் குறித்த உயர்நிலை குழுவின் அறிக்கை.

சுருக்கமாக சொன்னால், பூனைக்கு மணி கட்டியிருக்கிறோம். அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெற்றவையாக இருக்க வேண்டும், அனைத்து மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சி அரசாக ஒன்றிய அரசு செயல்பட வேண்டும் என்ற நம்முடைய இந்தக் கொள்கைதான் மற்ற மாநிலங்களின் உள்ளத்துக்குள் இருக்கும், வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் கொள்கையாக இருக்கும்.

எனவே, அனைத்து மொழிகள், இனங்கள், மதங்கள், பண்பாடுகள் உள்ளடக்கிய மாநிலங்களில் வாழும் மக்களை அவர்களது உரிமைகளோடு, உணர்வுகளோடு வாழ வைக்கும் உன்னதமான மாநில சுயாட்சி கொள்கையை, அரசியல் எல்லைகளைக் கடந்து அனைவரும் தங்களது அரசியல் கொள்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்த மாமன்றத்தின் மூலம் நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திட, ஒன்றிய அரசின் சார்பில், 1983ல் நீதிபதி சர்க்காரியா தலைமையிலான ஆணையம், 2000ம் ஆண்டில் வெங்கடாச்சலையா ஆணையம், 2004-ல் நீதிபதி பூஞ்ச்சி தலைமையிலான குழு ஆகியவை அமைக்கப்பட்டும், அவற்றின் சார்பில் ஆயிரக்கணக்கான பக்கங்களை கொண்ட அறிக்கைகள் வழங்கப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் ஏமாற்றமே தொடர்கிறது.

மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையே ஒன்றிய அரசிடம் போராடிப் பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம். ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாநிலங்களுக்குப் பகிரப்படும் நிதியானது, தொடர்ந்து செம்மையான முன்னெடுப்பு நடவடிக்கைகளால் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள மாநிலங்களின் பங்களிப்பிற்கு ஈடாக அல்லாமல் குறைவாகப் பகிரப்படுகிறது.

இதனையடுத்துதான், இத்தகைய இக்கட்டான சூழலில், கூட்டாட்சி கருத்தியலை வலியுறுத்தும் வகையிலும், ஒன்றிய-மாநில அரசுகளின் உறவுகளை, கொள்கைகளை மேம்படுத்திடவும், இந்திய அரசமைப்பு சட்டத்தின் விதிக்கூறுகள், நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஆணைகள் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும் ஆராய்ந்து மதிப்பீடு செய்திடவும் மற்றும் அதற்குரிய நடவடிக்கைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திடவும் உயர்மட்ட அளவிலான குழு ஒன்றினை அமைப்பது என தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது.

இப்படி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்பை தலைவராகவும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக்குழு முன்னாள் துணைத்தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர்களை உறுப்பினர்களாக கொண்டு அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை கடந்த 16ம் நாள் என்னிடம் வழங்கியது.

பேரவை உறுப்பினர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசுக்கும் நான் சொல்லிக் கொள்வது, “மாநில சுயாட்சி வேண்டும், ஒன்றியத்தில் கூட்டாட்சி மலர வேண்டும்!” இது தனிப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல; இந்திய நாட்டு மக்களின் வாழ்வியலுக்கும், வளர்ச்சிக்கும் முக்கியமான கோரிக்கை! கூட்டாட்சி என்பது வாழ்வியல் உணர்வு! பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவுக்கு கூட்டாட்சிதான் அடிப்படை! இதைத்தான் அந்த அறிக்கையும் நிறுவுகிறது.

எனவே, இத்தகைய தன்மை கொண்டதாக இந்திய அரசமைப்புச் சட்டத்தை நாம் மாற்ற வேண்டும். 1994ல் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “கூட்டாட்சி என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதி” என்று சொல்லப்பட்டுள்ளது. அத்தகைய கூட்டாட்சிக் கோட்பாட்டை அரசமைப்புச் சட்டத்தின் பண்பாடாகச் சேர்க்க வேண்டும்.

அதற்கு அரசமைப்புச் சட்டத் திருத்தமும், சீர்திருத்தமும் தேவை. கடந்த 76 ஆண்டுகளில் 106 முறை இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. எனவே, நாம் முயன்றால் மீண்டும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை திருத்த முடியும். இந்தியாவை முதிர்ச்சியடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளை நாம் தொடங்கியாக வேண்டும். அதிகாரமும், வாய்ப்புகளும் ஒரே இடத்தில் குவிந்திருக்கக் கூடாது.

அவை பரவலாக்கப்பட வேண்டும். அதற்கான சட்டபூர்வமான வழிகளை இந்த அறிக்கை நமக்கு வழங்கி இருக்கிறது. கூட்டாட்சித் தன்மை கொண்டதாக இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவது இந்திய ஒன்றியத்தைப் பலவீனப்படுத்தாது என்று இந்த அறிக்கை கூறுகிறது. அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய பாஜ அரசு கபளீகரம் செய்யும் சூழலில், ஆளுநர்கள் மூலமாக மாநில அரசுகளைச் செயல்பட விடாமல் தடுக்கும் நிலையில், இந்தித் திணிப்பின் மூலமாக, நிதி நெருக்கடிகளின் மூலமாக, தொகுதி மறுவரையறை என்ற சதியால், ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாடு அனுபவித்து வரும் நெருக்கடிகளில் இருந்து மீள ஒரே மருந்து மாநில சுயாட்சிதான்.

அதனை அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலமாக மட்டுமே அடைய முடியும். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்தக் கொள்கைக்கான வலிமையான ஆதரவு தெரிவிக்கும் ஜனநாயகச் சக்திகள் அதிகமாக இருக்கிறார்கள்; எண்ணிக்கையாலும், எண்ணங்களாலும் அதிகமாக இருக்கிறார்கள், அவர்களை ஒன்று திரட்ட வேண்டும். எனவே, இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றிய அரசும், மாநிலங்களும் போட்டியாளர்கள் அல்ல; இருவரும் பொதுவான ஒரு அமைப்பின் பங்குதாரர்கள். மாநிலங்கள் வளர்ந்தால்தான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளர முடியும் என்பதை ஒன்றிய அரசுக்கு உணர்த்துவோம். இப்படிப்பட்ட பின்னணியில்தான், நமது குடியரசின் அரசமைப்புச் சட்டத்தின் உயிர்ப்பைத் தீர்மானிக்கும் முக்கியமான தருணத்தில் நாம் நிற்கிறோம். நாம் இதுவரை பயணித்த பாதையை மீளாய்வு செய்து, உண்மையான கூட்டாட்சிக் கருத்தியல் வலுப்பெறும் வகையில் நமது எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டிய நேரம் இது.

இந்த அறிக்கையை தற்போது இந்த மாமன்றத்தின் மேலான பார்வைக்கு இப்போது வைக்கிறோம். இந்தியாவின் ஒற்றுமை – ஒருமைப்பாடு – பன்முகத்தன்மை – மக்களாட்சிப் பொறுப்புணர்வு – அரசமைப்புச் சட்ட ஒழுங்குமுறை ஆகியவற்றோடு, முதிர்ச்சி பெற்ற கூட்டாட்சி நாடுகளின் சிறந்த நடைமுறைகளையும் உள்ளடக்கித் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கையை அனைவரும் திறந்த மனத்துடன் ஏற்று, அறிவார்ந்த விவாதங்களை நடத்தி செழுமைப்படுத்த வேண்டும். ஒன்றிய-மாநில உறவுகளில் சமநிலையை மீட்டெடுக்க வேண்டும்.

மாநிலங்கள் வலுவாக இருந்தால்தான் ஒன்றிய அரசு வலுவாக இருக்கும். மாநிலங்களால்தான் நாட்டுக்கு வளர்ச்சியும், பெருமையும்! கூட்டாட்சிக் கருத்தியல் என்பது மாநிலங்களுக்கான சலுகை அல்ல; நாட்டிற்கான பாதுகாப்பு அரண். இதையெல்லாம் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

கொட்டக் கொட்டக் குனியக்கூடியவர்கள் அல்ல நாம். அண்ணாவின் உயிலுக்கு உயிர்கொடுப்போம்; கலைஞரின் ஐம்பெரும் முழக்கத்தை நிறைவேற்றிக் காட்டுவோம்; நாம் தான் இதைச் செய்ய வேண்டும். நம்மைவிட்டால் இதைச் செய்ய யாருமில்லை. நாம் தான் இதைச் செய்ய வேண்டும். நம்மைவிட்டால் இதைச் செய்ய யாருமில்லை. இது வரலாறு வழங்கியிருக்கக்கூடிய வாய்ப்பு. மலர்க மாநில சுயாட்சி! உருவாகட்டும் இந்தியக் கூட்டாட்சி! இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய பாஜ அரசு கபளீகரம் செய்யும் சூழலில், ஆளுநர்கள் மூலமாக மாநில அரசுகளைச் செயல்பட விடாமல் தடுக்கும் நிலையில், இந்தித் திணிப்பின் மூலமாக, நிதி நெருக்கடிகளின் மூலமாக, தொகுதி மறுவரையறை என்ற சதியால், ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாடு அனுபவித்து வரும் நெருக்கடிகளில் இருந்து மீள ஒரே மருந்து மாநில சுயாட்சிதான். அதனை அரசமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலமாக மட்டுமே அடைய முடியும்.

* மாநிலங்கள் வலுவாக இருந்தால்தான் ஒன்றிய அரசு வலுவாக இருக்கும். மாநிலங்களால்தான் நாட்டுக்கு வளர்ச்சியும், பெருமையும். கூட்டாட்சிக் கருத்தியல் என்பது மாநிலங்களுக்கான சலுகை அல்ல; நாட்டிற்கான பாதுகாப்பு அரண். இதையெல்லாம் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

Related Stories: