டெல்லி ஏ.ஐ. மாநாட்டில் சீன ரோபோ நாயை, இந்திய தயாரிப்பு போல் காட்சிப்படுத்தியதற்கு மன்னிப்பு கோரியது உ.பி. பல்கலை

 

டெல்லி: டெல்லி ஏ.ஐ. மாநாட்டில் சீன ரோபோ நாயை, இந்திய தயாரிப்பு போல் காட்சிப்படுத்தியதற்கு உ.பி. பல்கலை மன்னிப்பு கோரியது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 16ம் தேதி தொடங்கி உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க மாநாடு நடந்து வருகிறது. வரும் 20ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த சர்வதேச மாநாட்டில் 110 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், 30 சர்வதேச அமைப்புகள் மற்றும் 45 அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த புத்தாக்க ஏஐ மாநாட்டில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் அனைவரின் முன்னிலையிலும் காட்சிப்படுத்தப்பட்டன. சில கண்டுபிடிப்புகள் வரவேற்பையும் பெற்றுள்ளன.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவர்கள், ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் ரூ. 2 லட்சம் முதல் 3 லட்சம் மதிப்பிலான சீனாவில் தயாரிக்கப்பட்ட யுனிட்ரீ கோ2 என்ற ரோபோ நாயை தாங்கள் தயாரித்ததாகக் கூறி ஏஐ மாநாட்டில் காட்சிப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கடும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இந்த விவகாரம் பெரிதான நிலையில், ஏஐ உச்சி மாநாட்டில் இருந்து கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் உடனே வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி ஏ.ஐ. மாநாட்டில் சீன ரோபோ நாயை, இந்திய தயாரிப்பு போல் காட்சிப்படுத்தியதற்கு உ.பி. பல்கலை மன்னிப்பு கோரியது. இது தொடர்பாக கல்கோடியா பல்கலை. நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஏ.ஐ. உச்சி மாநாட்டில் ஏற்பட்ட குழப்பத்துக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எங்கள் சார்பில் அரங்கில் இருந்த அலுவலருக்கு முழுமையான தகவல் தெரியவில்லை. சீன ரோபோ நாய் எங்கு தயாரிக்கப்பட்டது என்ற விவரம் தங்கள் அலுவலருக்கு தெரியவில்லை. புதிய கண்டுபிடிப்பு குறித்து தவறான கருத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: