நின்னா தோத்துடுவேன்… வேறு தொகுதி கொடுங்க… இபிஎஸ்சிடம் கதறும் 10 மாஜி அமைச்சர்கள்

அதிமுகவை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை பொறுப்பை ஏற்றாலும் புதுகட்சிகளை சேர்ப்பது, சீட்டு ஒதுக்கீடு போன்ற வேலைகளையெல்லாம் பாஜவே பார்த்து கொண்டு அதிமுகவை டம்மியாகவே வைத்திருக்கிறது. அதிமுகவில் விருப்பமனு வாங்கி முடித்த நிலையில், அவர்களிடம் நேர்காணலையும் இபிஎஸ் நடத்தி முடித்திருக்கிறார். கூட்டணிக்கான தொகுதி பங்கீடு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் அதிமுகவில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், எடப்பாடி தயாரித்த வேட்பாளர்கள் பட்டியலில் 10 மாஜி அமைச்சர்கள் தங்களுக்கான தொகுதிகளை மாற்றி தருமாறு கேட்டுள்ளார்களாம்.

அதன்படி விழுப்புரம் தொகுதியில் 2 முறை வெற்றி பெற்று கடந்த தேர்தலில் திமுகவிடம் படுதோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இந்த முறை தனது சொந்த ஊரான மயிலம் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்து கேட்டுள்ளாராம். அதேபோல், கடலூர் தொகுதியில் போட்டியிட்டு திமுகவிடம் தோல்வியடைந்த சம்பத்தும் இந்த தேர்தலில் பண்ருட்டி தொகுதியை தனக்கு ஒதுக்கித்தரும்படி வலியுறுத்தி வருகிறாராம். ஆனால் அங்கு சம்பத்தை உள்ளே விடாமல், இபிஎஸ்சின் நெருங்கிய ஆதரவாளர் சத்தியா பன்னீர்செல்வம் மேலும் சிலர் போட்டியிட நெருக்கடி கொடுத்திருக்கிறார். அதேபோல் சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு 20 ஆண்டுகளாக தன்கோட்டையாக வைத்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கடந்த 2021 தேர்தலில் திமுகவிடம் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொகுதி கைவிட்டு போனதால் இந்த முறை வேறு தொகுதி மாறி போட்டியிட உள்ளாராம்.

அண்மையில் அந்த தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உங்களை (தொகுதி மக்களை) சுற்றிசுற்றி வந்தேனே, என்னை கைவிட்டு விட்டீங்களே என்று புலம்பித்தள்ளிய ஜெயக்குமார் மயிலாப்பூர் அல்லது வேறு தொகுதியில் போட்டியிட முடிவெடுத்திருப்பதாக கூறப்பட்டது. அந்த தொகுதி மக்களிடம் இங்குதான் நிற்பேன் என்று கூறினாலும் வரும் தேர்தலில் தொகுதி மாறுவது உறுதி என்கின்றனர். அதேபோல் டெல்டா மாவட்ட மாஜி அமைச்சரான ஓ.எஸ்.மணியன், மதுரை மாவட்டத்தில் செல்லூர் ராஜூ, , கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, உட்பட 10 மாஜி அமைச்சர்கள் இந்த முறை தொகுதி மாறி போட்டியிட உள்ளார்களாம்.

தொகுதி மாறும் சில மாஜி அமைச்சர்கள் கடந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தவர்கள். அப்போது பாஜ கூட்டணிதான் தோல்விக்கு காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தனர். இதனால் சி.வி.சண்முகம், சம்பத், ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் தொகுதி மாறி போட்டியிட கட்சி தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். கரண்ட் எம்எல்ஏவாக உள்ள சிலர், கட்சியில் உட்கட்சி பூசல், தொகுதியில் மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிட்டால் தோல்விதான் கிடைக்கும் என்று தொகுதி மாறி போட்டியிட தலைமையை வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ், ஜெயலலிதா பாணியில் கண்டிஷன் போட்டிருக்கிறாராம். கட்சியின் சீனியர்களே இப்படி தோல்விக்கு பயந்து தொகுதி மாறினால் மற்றவர்கள் எப்படி நின்று வெற்றி பெறுவார்கள், தேர்தல் பணியாற்றுவார்கள். ெதாகுதி மாறுவது கட்சியின் வெற்றிக்கு பின்னடைவை ஏற்படுத்தும், போட்டியிடுபவர்கள் மத்தியிலும் சற்று மனதளர்வை ஏற்படுத்தும். எனவே நீங்கள் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதியில் நின்று வெற்றி பெற்று வருமாறு உத்தரவு போட்டிருக்கிறாராம்.

குறிப்பாக விழுப்புரம் தொகுதியில் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற லட்சுமணனிடம், படுதோல்வியடைந்த சி.வி.சண்முகத்தை மீண்டும் அந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்று வருமாறு கூறியிருக்கிறாராம். ஆனால் மாஜி அமைச்சர்களோ ஏற்கனவே தொகுதி மாறி போட்டியிட உள்ள தொகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே கரன்சியை இறைத்து தேர்தல் பணிகளை தொடங்கியிருக்கிறார்களாம். இதனால் இபிஎஸ் பேச்சை கேட்டு பழைய தொகுதிகளிலேயே போட்டியிடுவார்களா அல்லது அவரை மீறி தொகுதி மாறி போட்டியிடுவார்களா என்பது போக, போகத்தான் தெரியும்.

Related Stories: