கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட கட்சிகள், வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சீட்டுக்கு ஆசைப்பட்டு சிலர் கட்சி மாறியும் வருகின்றனர். கேரள முன்னாள் முதல்வரான மறைந்த வி.எஸ்.அச்சுதானந்தனிடம் நீண்ட காலம் உதவியாளராக இருந்த சுரேஷ் என்பவர் காங்கிரசுக்குத் தாவ தீர்மானித்துள்ளார். அவரிடம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கோட்டையான மலம்புழா தொகுதியில் சுரேஷை நிறுத்துவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்தத் தொகுதியில் வி.எஸ். அச்சுதானந்தன் நான்கு முறை போட்டியிட்டுள்ளார். சுரேஷை நிறுத்துவதன் மூலம் மார்க்சிஸ்ட் கட்சியிடம் இருந்து இந்தத் தொகுதியை கைப்பற்றி விடலாம் என்று காங்கிரஸ் கருதுகிறது. ஆனால் காங்கிரசின் இந்தத் திட்டத்தை முறியடிக்க மார்க்சிஸ்ட் வேறு ஒரு அதிரடித் திட்டத்தை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி மலம்புழா தொகுதியில் அச்சுதானந்தனின் மகன் அருண்குமாரை நிறுத்த மார்க்சிஸ்ட் ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக அருண்குமாரிடம் மார்க்சிஸ்ட் தலைவர்கள் ஆலோசனை நடத்தியதாகவும், போட்டியிட அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அருண்குமார் போட்டியிட்டால் அச்சுதானந்தனின் ஆதரவாளர்களின் ஓட்டு கண்டிப்பாக கிடைக்கும் என்றும், அதன் மூலம் அந்தத் தொகுதியை தக்க வைக்கலாம் என்றும் மார்க்சிஸ்ட் கருதுகிறது. அதுமட்டுமில்லாமல் அருண்குமார் மூலம் சுரேஷுக்கு செக் வைக்கவும் மார்க்சிஸ்ட் திட்டமிட்டுள்ளது. அருண்குமார் மலம்புழா தொகுதியில் போட்டியிட்டால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று சுரேஷும் ஒப்புக்கொண்டுள்ளார். இருவரும் இந்தத் தொகுதியில் போட்டியிட்டால் மலம்புழா ஒரு விஐபி தொகுதியாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
