பட்டியலின மக்கள், பழங்குடியினர் மக்களுக்கு ஆதரவாக பாஜ சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே நேற்று போராட்டம் நடந்தது. இதில் தேஜ கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக, பாமக, அமமுக, தமாகா கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசி முடித்த அடுத்த வினாடியே கூட்டத்திலிருந்த இளைஞர் ஒருவர், ‘பட்டியலின மக்கள்… பட்டியலின மக்கள்… என்று ஏன் ஐயா சொல்கிறீர்கள்?. நான் ஒரு மீனவ சமுதாயத்தை சேர்ந்தவன். எல்லோரும் சமம் தானே’ என்று கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தில் இருந்த பாஜவினர் அந்த இளைஞரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த போராட்டத்தில் பட்டியல் இன மக்களுக்காக குரல் கொடுக்காமல் மோடியின் புகழ்பாடியதால் போராட்டத்துக்கு வந்தவர்கள் அதிருப்தியடைந்து கிளம்பிச் சென்றனர்.
* திவெக யாருடன் கூட்டணி 28ம் தேதி தெரியும்
திராவிட வெற்றி கழகத்தின் அரசியல் சட்ட திட்டங்கள் மற்றும் கொள்கை கோட்பாடுகள் குறித்தான புத்தக வெளியிட்டு விழா சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இப்புத்தகத்தை திராவிட வெற்றி கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மல்லை சி ஏ சத்யா வெளியிட்டார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திராவிட வெற்றி கழகம் கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தில் கட்சி பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தோம், ஆனால் சில கேள்விகள் கேட்டு உள்ளனர். விரைவில் அதற்கு பதில் அளிக்கப்படும். வரும் 28ம் தேதி திராவிட வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு நடைபெற உள்ளது. அதில் கழக நிர்வாகிகள் உடன் ஆலோசனை மேற்கொண்டு திருத்தங்கள் இருந்தால் மேற்கொள்ளப்பட்டு முழுமையாக வெளியிடப்படும். அதுமட்டுமின்றி இ.சி ஆரில் தலைமை கழகம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.
தற்போது அமைக்க இருக்கும் இடம் என் மனைவி குடும்பத்திற்கு சொந்தமானது, மதிமுகவில் இருக்கும் போது கட்சியா, குடும்பமா என்று முடிவெடுக்கும் தருவாயில் இருந்தேன் அப்போது கட்சி தான் முக்கியம் என்று என் மனைவி குடும்பத்துடன் பேசாமல், அவர்கள் வீட்டுக்கு போகாமல் இருந்தேன். அவ்வளவு தீவிர வைகோ ஆதரவாளராக இருந்தேன். ஆனால் அவர் மகனுக்காக எங்களை வெளியேற்றினார். அத்துடன் எங்கள் முதல் அத்தியாயம் முடிந்தது. ஆனால் கட்சி தொடங்கி இரண்டாவது அத்தியாத்தை நாங்கள் தொடங்கினோம். வரும் தேர்தலில் போட்டியிடுவது, கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட முக்கிய அறிவிப்பு அனைத்தும் வரும் 28ம் தேதி திராவிட வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழுவின்போது அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
