தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27: 3 மணி நேரத்தில் 1.31 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.5,000 உரிமை தொகை வரவு: நாடே திரும்பி பார்த்து மக்கள் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர்; சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு புதிய நிரந்தர வீடுகள் கட்டித் தரும் திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக மொத்தம் 10,469 வீடுகள் கட்டுவதற்கு ரூ.630 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், 6,010 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில் மற்ற வீடுகளின் கட்டுமானப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

* பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” மகாகவி பாரதியின் பெருங்கனவை நனவாக்கி, மகளிரின் வாழ்வை மேம்படுத்திட, அவர்தம் மாண்பை போற்றிட, அவர்களின் நலன் காத்திட, மகளிரை தொழில் முனைவோராக உயர்த்திட பல முன்னோடி திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

* தமிழ்நாடு அரசின் முத்திரை திட்டங்களின் முதன்மையானது ‘கலைஞர் மகளிர் உரிமை திட்டம்’. இல்லங்களில் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்திடும் இத்திட்டம் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக திகழ்கிறது. ஏறத்தாழ ஒரு கோடியை 31 லட்சம் மகளிர் பயன்பெறும் இந்த மகத்தான திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன என்பதே இத்திட்டத்தின் வெற்றி என நாம் பெருமிதம் கொள்வோம்.

* திட்டத்தின் பலன்கள் எதிர்வரும் மாதங்களிலும் தடை இன்றி ஒரு கோடியே 31 லட்சம் பயனாளிகளுக்கும் கிடைத்திடும் வகையில், அண்மையில் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான உரிமை தொகை 3,000 ரூபாயும், கூடவே கோடைக்கால சிறப்பு தொகுப்பாக 2,000 ரூபாயும் சேர்த்து, மொத்தம் ஐந்தாயிரம் ரூபாய் மகளிரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட போது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனது. கடந்த வெள்ளிக்கிழமையன்று, மூன்று மணி நேரத்திற்குள் ஒரு கோடியே 31 லட்சம் மகளிரின் வங்கிக் கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் உரிமை தொகை வரவு வைத்த போது இந்த நாடே திரும்பி பார்த்தது.

* மகளிர் மனம் குளிர, இல்லத்தரசிகளின் இதயங்கள் நெகிழ்ச்சியில் நிறைந்திடும் வண்ணம், ஒரே நாளில் ஏறத்தாழ 6,500 கோடி ரூபாய் நிதியினை தமிழ்நாடு எங்கும், ஏழை, எளியவரின் கரங்களில் தவழச் செய்த, எங்களின் முறை செய்து காப்பாற்றும் மன்னவனாகிய தமிழ்நாடு முதல்வருக்கு கோடானு கோடி மங்கையரின் சார்பாகவும், இம்மாமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

* மகளிரின் பயணச் செலவிற்கான சுமையை குறைத்திடவும், அவர்கள் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்கவும், அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் செல்ல வழி வகுக்கும் ‘விடியல் பயணம்’ திட்டதின் மூலம், இதுவரை 881 கோடி முறை பாதுகாப்பான பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். இதனால், சராசரியாக மாதம் ஒன்றுக்கு 888 ரூபாய் வரை சேமிப்பை நமது மகளிர் பெறுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

* தஞ்சை, ஈரோடு, ராமநாதபுரம், சென்னையில் ரூ.285 கோடியில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம்
இடைக்கால பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் வெளிக்கொணரப்பட்ட தொல்பொருட்களை அழகுற காட்சிப்படுத்த, அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவற்றில், உலகத் தரத்திலான கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகங்கள் ஏற்கனவே பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டு பெரும் வரவேற்றை பெற்றுள்ளன. மேலும், கீழடி திறந்தவெவளி அருங்காட்சியகம் அண்மையில் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இவை தவிர, தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம், ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரம் மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஒரு புதிய வெண்கல அருங்காட்சியகம் மற்றும் சிந்துவெளி நாகரிக அருங்காட்சியக கூடங்கள் மற்றும் திருவண்ணாமலையில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம் என மொத்தம் ரூ.285 கோடியில் அமைக்கப்பெற உள்ளன.

* புதுமைப்பெண் திட்டம் மூலம் 6,95,296 மாணவியர் பயன்
மகளிர் கல்வியை போற்றிப் பாதுகாத்திட பள்ளி கல்வியிலிருந்து உயர் கல்வி வரை தொடர்ந்திட, இவ்வரசு செயல்படுத்தியதே உயர்கல்விக்கு உதவிடும் ‘புதுமைப்பெண் திட்டம்’. இந்த திட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவியர், அவர்தம் உயர் கல்வி கற்றலை மாதந்தோறும் ரூ.1000 வழங்கி ஊக்கப்படுத்தும் இத்திட்டத்தின் கீழ் இதுவரை 6,95,296 மாணவியர் பயன்பெற்றுள்ளனர்.

* சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி கடன் உதவி
மகளிரின் தற்சார்பு வாழ்வுக்கு வழிகோல், 1988ம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழு இயக்கம் கண்டார் கலைஞர். அவர் வழியில் நடைபோடும் இவ்வரசு, இவ்வியக்கம் தழைத்தோங்கிச் செழித்திடும் வகையில், இதுரை 6,23,529 சுய உதவிக் குழுக்கள் 1 லட்சத்து 41 ஆயிரத்து 718 கோடி ரூபாய் வங்கி கடனுதவியாக பெற்று பயனடைந்திட வழிவகை செய்துள்ளது. சுய உதவிக் குழு மகளிரின் உற்பத்திப் பொருட்களின் விற்பனையை பெருக்கிட ‘வாழ்ந்து காட்டுவோம்’ முதலான சீர்மிகு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

* 1% பெண்கள் பெயரிலான பத்திர பதிவு சலுகை மூலம் 3.71 லட்சம் பெண்கள் பயன்
பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகளுக்கு கடந்த ஏப்ரல் 2025 முதல் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சத்து 71 ஆயிரத்து 705 பெண்கள் இதுவரை பயனடைந்துள்ளனர். மகளிர் பாதுகாப்பிற்காகவும், அவர்களின் தன்னம்பிக்கையுடன் தலைநிமிர்ந்து வாழவும், தன்னிறைவுடன் தனது வாழ்வை வடிவமைத்திடவும் ‘இளஞ்சிவப்பு ஆட்டோ’ வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அதேபோல் நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீதம் பேர் தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் என்ற பெருமையை நாம் அடைந்துள்ளோம்.

* 5 ஆண்டுகளில் 23.56 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா
கடந்த 5 ஆண்டுகளில் 23 லட்சத்து 56 ஆயிரத்து 623 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு முறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மாநிலத்தின் இதர நகர்ப்புர பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு இதுவரை 77,800 இணைய வழி வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் 15,393 இணையவழி பட்டாக்களும், இதர மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 62,407 இணையவழி பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன.

* தாயுமானவர் திட்டத்தில் முதியவர்களுக்கு 27.40 லட்சம்
முதுமையின் துயர் துடைக்க மூத்த குடிமக்களுக்கு பகல் நேரம் பராமரிப்பு மையங்களாக ‘அன்புச் சோலைகள்’ 25 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அண்மையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தோர் சிரமமின்றி பொருட்கள் பெற வேண்டும் என்ற மேன்மையான நோக்கத்தில் அவர்களின் இல்லத்திற்கே பொருட்களை நேரடியாக கொண்டு சென்று விநியோகிக்கும் முறையினை ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ் இந்த அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 27 லட்சத்து 40 அயிரத்து 703 தகுதியுடய பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

* உள்ளாட்சி அமைப்புகளில் 3,632 மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக பொறுப்பு
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டட்ம 1994 மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 ஆகியவற்றில் உரிய திருத்தங்களை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை 3,632 மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக பொறுப்பேற்றுள்ளனர். அதேபோல், அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு நேரடி நியமன முறையில் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பணி உயர்வு முறையிலும் இட ஒதுக்கீடு வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் பராமரிப்பு தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. மாதாந்திர உதவித்தொகையினை 1000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக அதிகரித்ததன் மூலம் 8 லட்சத்து 52 ஆயிரத்து 680 பேர் பயனடைந்து வருகின்றனர்.

* பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு
2021-22ம் கல்வியாண்டில், முதற்கட்டமாக கல்வியில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் உண்டு உறைவிட வசதியுடன் கூடிய மேல்நிலை பள்ளிகளாக தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் நிறுவப்பட்டு, இப்போது சென்னையில் உள்ள மாநில தகைசால் பள்ளியுடன், 38 மாவட்டங்களிலும் மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வாய்ப்புகளை உருவாக்குதல். அவற்றை அணுக தேவையான கல்வி மற்றும் கலை ஆளுமைத்திறன் பயிற்சி போன்றவை வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இதன் மூலம், கடந்த 4 ஆண்டுகளில் 2,358 மாணவர்கள் 93 முன்னணி கல்வி நிறுவனங்களில் 50 விதமான துறைகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். இதில் 41 மாணவர்கள் இந்திய தொழில்நுட்ப கழகங்களில் பயின்று வருகின்றனர். மேலும், 17 மாணவர்கள் ஜப்பான், தைவான். மலேசியா ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்களில் முழு கல்வி உதவித்தொகைகளுடன் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இந்த இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் பள்ளிக்கல்வி துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* கடந்த 5 ஆண்டுகளில் 38 புதிய கல்லூரி உருவாக்கம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 10,563 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 38 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு, 18,760 மாணவர்கள் கூடுதலாக பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு உயர்கல்வியில் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகள் காரணமாக நாட்டிலேயே உயர்கல்வி சேர்க்கை சராசரியை விட ஏறத்தாழ இருமடங்காக 47 சதவீதம் பெற்று தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.

* 6.75 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி
கல்லூரி மாணவர்கள் தம் தொழில்நுட்ப திறனை வளர்த்து கொள்வதற்காக ரூ.2,172 கோடி செலவில் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டன. இதுவரை 6,75,888 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தை ஆசியாவின் முதன்மை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்காக ரூ.1,380 கோடி செலவிலான முன்னோடி திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* கல்லூரி கனவு திட்டம் மூலம் 2.68 லட்சம் மாணவர்கள் பயன்
பள்ளிக்கல்வி முடித்த மாணவர்கள் அவர்களது விருப்பப்படி, கல்லூரி கல்வியை தேர்ந்தெடுப்பதில் வழிக்காட்ட கல்லூரி கனவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 2.68 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

* உயர்கல்வித்துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு
மாநில பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பு நிதி ரூ.767 கோடி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் செயல்படும் மாநில பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளில் உரிய முன்னேற்றங்களை கொண்டு வரும் நோக்கில் ரூ.175 கோடி கொண்ட செயல்திறன் ஊக்க நிதியமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் உயர்கல்வி துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: