சென்னை: தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை பரவலான வளர்ச்சி பெற்றுள்ளது என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைகால பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது;
* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில், தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடந்த ஐந்து வருட காலத்தில் வங்கிகள் மூலம் ரூ.10.70 லட்சம் கோடி வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில், கடந்த ஐந்தாண்டு காலத்தில் 18 புதிய தொழிற்பேட்டைகள் தமிழ்நாடு சிறு தொழில் முன்னேற்றக் கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 3,735 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
* இருபத்தைந்து வகையான கைவினைத் தொழில்களில் ஈடுபடும் கைவினைஞர்களுக்கு நிதியுதவி, திறன் பயிற்சி மற்றும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கும் நோக்கில் துவங்கப்பட்ட ‘கலைஞர் கைவினைத் திட்டத்தின்’ கீழ், இதுவரை ரூ.405 கோடி கடன் உதவி மற்றும் ரூ.83 கோடி மானியம் பெற்றுத் தர 23,879 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில், தங்கநகைப் பூங்காவின் முதற்கட்டப் பணிகள் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தங்களின் சேவைக்கான தொகையினை விரைந்து பெறும் வகையில், ‘தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி முறை’ எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை, இத்திட்டத்தின் கீழ் ரூ.5,171 கோடி அளவிற்கு 1,461 தொழில் நிறுவனங்கள் பயனடைந்துள்ளன.
* ‘தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின்’ மூலமாக, ‘தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி’, ‘விண்வெளி தொழில்நுட்ப நிதி’ ஆகிய முக்கியமான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ‘இணை உருவாக்க நிதியம்’ ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தகவல் தொழில்நுட்பத்துறையில், தமிழ்நாடு பரவலான வளர்ச்சி பெறுவதை நமது அரசு உறுதி செய்து வருகிறது. ஆண்டுதோறும் 2.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதியுடன், மாநிலம் முழுவதும் பல லட்சம் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கி வரும் பெரும் துறையாக தகவல் தொழில்நுட்பத்துறை திகழ்கிறது. 250-க்கும் மேற்பட்ட ‘உலகளாவிய திறன் மையங்கள்’ இயங்கி வரும் சென்னை இந்தியாவின் முன்னணி மையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள நிலையில், கோவை, மதுரை, திருச்சு உள்ளிட்ட நகரங்களும் இந்த வளர்ச்சி வேகத்திற்கு அதிகமாக பங்களித்து வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
