சென்னை: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை மாபெரும் காது குத்தும் விழா என்று அதிமுக விமர்சனம் செய்திருந்தது. அதிமுகவின் இந்த விமர்சனத்திற்கு, புதிய திட்டங்களுக்கு அறிவிப்பு வெளியிடுவது மரபல்ல என்று தமிழக அரசு பதிலடி கொடுத்துள்ளது. நேற்று தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்ட தொடரில் பங்கேற்க வந்த அதிமுகவினர், இடைக்கால பட்ஜெட்டை ‘மாபெரும் காது குத்தும் விழா’ நடைபெற உள்ளது என பத்திரிகை அச்சடித்து வழங்கினர். இதற்கு தமிழக அரசின் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டது. பொதுவாக, இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பது அரசின் சாதனைகளை தெரிவிக்கும் அறிக்கையாக இருக்கும். மேலும், பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் இடைக்கால நிதிக்கு ஒப்புதல் கோரும் அறிக்கையாகவும் இருக்கும்.இதுதான் இதுநாள் வரையில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாகும். எனவே, இடைக்கால நிதிநிலை அறிக்கையில், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடுவது மரபு இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட் குறித்து அதிமுகவினர் விமர்சனம் செய்து இருப்பதும், அதற்கு தமிழக அரசு சார்பில் உடனடியாக பதிலடி கொடுத்தது பேசும் பொருளாகியுள்ளது.
