×

ஒன்றிய அரசின் வரி விகித மாற்றங்களால் ரூ.9,600 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து நிதியமைச்சர் புள்ளி விவரங்களுடன் குற்றச்சாட்டு

* தமிழ்நாட்டுக்கு செயற்கை நிதி நெருக்கடி தர ஒன்றிய அரசு முயற்சி

சென்னை: ஒன்றிய அரசின் வரி விகித மாற்றங்களால் நடப்பு ஆண்டில் மட்டும் ரூ.9,600 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும், தமிழ்நாட்டிற்கு செயற்கையான நிதி நெருக்கடியை ஏற்படுத்த ஒன்றிய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக 2026-27ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு புள்ளி விவரத்துடன் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்து பேசியதாவது: ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பில், ஒன்றிய அரசு மாநில அரசுகளை நியாயமற்ற முறையில் நடத்திய பல நிகழ்வுகள் கடந்த காலங்களில் கண்டுள்ளோம். எனினும், இந்த அரசு எதிர்கொண்டு வரும் சவால்கள் முன்னெப்போதும் தமிழ்நாடு சந்தித்திராத ஒன்று.

தமிழ்நாட்டிற்கு பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களை மறுப்பது, ஒன்றிய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களுக்கான நிதியை விடுவிக்காமல் நிறுத்திவைப்பது, மாநிலங்களுடன் உரிய ஆலோசனை மேற்கொள்ளாமல் வரி விகிதங்களை சீரமைப்பது அல்லது நியாயமற்ற நிபந்தனைகளுடன் கூடிய திட்டச் செலவினங்களை மேற்கொள்ள கட்டாயப்படுத்துதல் ஒவ்வொரு வழியிலும் தமிழ்நாட்டின் நிதிநிலையில் செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய அரசு மேற்கொண்டுவருவது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

பல்வேறு மாநிலங்களின் ஆட்சேபனைகள் மற்றும் எதிர்ப்புகளை கருத்தில் கொள்ளாமல், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விகிதங்களை சீரமைப்பதற்கு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமைப்பு ஒப்புதல் அளித்தது. இதனால், சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீட்டு நடைமுறை முடிவடைந்ததால் ஏற்கனவே ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கிடையில், இந்த வரி விகித மாற்றங்கள் மாநிலங்களின் நிதி நிலையில் மேலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும். நடப்பு ஆண்டில் மட்டும் ரூ.9,600 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2025-26ம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு-செலவு திட்டத்தில், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மத்திய வரிகளில் பங்கு, திருத்த மதிப்பீடுகளில் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நடப்பு ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு எதிர்பாராத வகையில் ரூ.1,202 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல் சாசனம் பிரிவு 293(3)-ன் படி மாநில அரசுகள் தங்களுக்குரிய கடனை திரட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்கான அதிகாரத்தை பயன்படுத்தி, ஒன்றிய அரசானது, நிலுவையில் உள்ள உத்தரவாதங்களில் 5 சதவீதத்தை உத்தரவாத மீட்பு நிதியத்திற்கு மாற்றவேண்டும் என முன்னறிவிப்பின்றி விதித்துள்ள நிபந்தனையால், அரசிற்கு ரூ.3,087 கோடி எதிர்பாராத மற்றும் கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது.

* அரசியல் சாசன பிரிவு 293ன்படி தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கு ரூ.16,290 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என ஒன்றிய அரசு நிபந்தனை விதித்துள்ளது. அவ்வாறு வழங்க இயலாத நிலையில், மாநில அரசிற்கு அனுமதிக்கப்படும் கடன் உச்சவரம்பில் இருந்து அத்தொகை கழிக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு நிபந்தனை விதித்துள்ளது. தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கு ரூ.413 கோடி மட்டுமே உள்ளபடியான இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசின் நிபந்தனை, நடப்பு ஆண்டில் மாநில அரசிற்கு ரூ.15,877 கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது.

* மாநில அரசுகளின் செலவினங்கள் ஒருபுறம் உயர்ந்து வரும் நிலையில், ஒன்றிய அரசு பொறுப்பேற்றுள்ள திட்டங்களுக்கு மாநில அரசுக்கு உரிய நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்திற்கான மானியங்கள் ரூ.3,548 கோடி, ஜல் ஜீவன் இயக்கத்திற்கு ரூ.3,112 கோடி மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய நிதிக்குழு பரிந்துரைப்படி விடுவிக்கப்பட வேண்டிய மானியங்கள் ரூ.2,246 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிகளுக்கான செலவினத்தை ஒன்றிய அரசும் மாநில அரசும் 50:50 என மேற்கொள்வதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருந்தாலும், மாநில அரசிற்கு கிடைக்க வேண்டிய பலன்கள் இன்றளவும் முழுமையாக கிடைக்கவில்லை. இதனால் மாநில அரசின் சொந்த நிதியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒன்றிய அரசின் பங்கான சுமார் ரூ.9,500 கோடி, மாநில அரசின் மொத்த நிலுவைக் கடன்களின் ஒரு பகுதியாக தொடர்ந்து வருகிறது. இதனால் மாநிலத்தின் கடன் உயர்ந்து காணப்படுகிறது. மாநில அரசின் பணப்புழக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது.

* 2025-26ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.2,20,895 கோடி மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் சொந்த வரி வருவாய், திருத்த மதிப்பீடுகளில் ரூ.2,06,540 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகள் வரி வருவாய் குறைந்துள்ளதே இந்த மதிப்பீடு குறைந்ததற்கு முக்கிய காரணம். 2026-27ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2,29,579 கோடியாக இருக்கும். இது வணிகவரிகளின் கீழ் ரூ.1,62,417 கோடி, முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு கட்டணங்களின் கீழ் ரூ.31,881 கோடி, வாகனங்கள் மீதான வரி ரூ.14,928 கோடி மற்றும் மாநில ஆயத்தீர்வையின் கீழ் ரூ.13,668 கோடி உள்ளடக்கியது. மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 2026-27ம் ஆண்டில் 11.15 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

* 2025-26ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.3,31,569 கோடியாக மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் வரவினங்கள், திருத்த மதிப்பீடுகளில் ரூ.3,09,698 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2026-27ம் ஆண்டில் மொத்த வருவாய் வரவினங்கள் ரூ.3,44,575 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது திருத்த மதிப்பீடுகளைவிட 11.26 சதவீதம் அதிகமாகும்.

* எனினும், மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு வழங்க மறுக்கும் நிதி, அனுமதி மறுக்கப்படும் நலத் திட்டங்கள் என பல தடைகளை தாண்டியும் தமிழ்நாடு சாதனைகள் புரிந்து வருகிறது. குறிப்பாக ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் நாட்டில் உள்ள முன்னணி மாநிலங்களுள் ஒன்றாக திகழ்வது மட்டுமின்றி, மின்னணு பொருட்களின் ஏற்றுமதி மற்றும் மோட்டார் வாகனங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது.

* ஒட்டுமொத்த நிலுவைக் கடன், 2025-26ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் 9,52,374 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு, ஒன்றிய அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால், ஒன்றிய அரசின் கணக்குகளில் இடம்பெற வேண்டிய 9,522.65 கோடி ரூபாயும் இதில் உள்ளடங்கும். மாநில அரசின் கடன் செயற்கையாக அதிகரித்துக் காணப்படுகிறது. இத்தொகை நீங்கலாக, திருத்த மதிப்பீடுகளில் உள்ள கடன் 9,42,851 கோடி ரூபாயாகவும், நிலுவையில் 2026-27ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் 10,62,248 கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* 2 மணி நேரம் 22 நிமிடங்கள் பட்ஜெட் வாசித்த அமைச்சர்
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியதும், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் உரையை படிக்க தொடங்கினார். 158 பக்கங்கள் கொண்ட பட்ஜெட் உரையை அமைச்சர் தங்கம் தென்னரசு சரியாக 11.52 மணிக்கு படித்து முடித்தார். அதன்படி 2 மணி நேரம் 22 நிமிடங்கள் அவர் பட்ஜெட் உரையை வாசித்தார். முன்னதாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய, பேரவைக்குள் வந்த அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வேளாண் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர்கள், திமுக மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சால்வை மற்றும் புத்தகம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags : EU government ,Finance ,Tamil Nadu ,Chennai ,EU ,
× RELATED சென்னை உட்பட 20 மாவட்டங்களில்...