×

மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும் : அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்று இடைக்கால பட்ஜெட்டின் போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “3 வழித்தடங்களில் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் 118.9 கி.மீ தூரத்திற்கான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் பகுதியை இயக்குவதற்கான ஒழுங்குமுறை அனுமதி ரயில்வே வாரியத்திடமிருந்து விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம், வடபழனியில் தற்போதுள்ள மெட்ரோ வழித்தடத்துடன் இணைக்கப்பட உள்ளது. 11 மெட்ரோ நிலையங்களைக் கொண்ட 146 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடமானது விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.

கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை நிறைவேற்ற, அவற்றிற்கான விரிவான திட்ட அறிக்கைகளுக்கு ஒப்புதல் கேட்கப்பட்ட போது, அவற்றிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஒன்றிய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. அவ்விரு மாநகரங்களிலும் 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகையே உள்ளதாக குறிப்பிட்டு இத்திட்ட அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு விளக்கம் அளித்திருக்கிறது.

இந்நகரங்களுக்கு இணையான நாட்டின் பிற நகரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது போன்றே கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களையும் மறுபரிசீலனை செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கிட தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

சென்னை விமான நிலையம் முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் அமைந்துள்ள கிளாம்பாக்கம் வரையிலும், அதேபோல் கோயம்பேடு முதல் பட்டாபிராம் வழியாக ஆவடி வரையிலும், திருப்பெரும்புதூர் வழியாக பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையிலுமான புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை நிறைவேற்றிட மாநில அரசு கொள்கை ரீதியிலான ஒப்புதல் வழங்கி, ஒன்றிய அரசின் ஒப்புதல் மற்றும் நிதியுதவிக்கு பரிந்துரைத்திருக்கிறது.

மேலும் மேற்காணும் திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துதல், பயன்பாட்டு அமைப்புகளை மாற்றியமைத்தல் போன்ற ஆரம்பகட்ட பணிகளை மேற்கொள்வதற்கான நிர்வாக ஒப்புதலையும் மாநில அரசு வழங்கி இருக்கிறது.அதே போல் சென்னையின் பிராட்வே பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில், ஒருங்கிணைந்த பன்முகப் போக்குவரத்து வசதிகள் கொண்ட பேருந்து நிலையம், நவீன வசதிகளுடன் அலுவலக வளாகம் மற்றும் குறளகம் மறு மேம்பாடு ஆகியவற்றுக்கான கட்டுமானப் பணிகள் 823 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது நடைபெற்று வருகின்றன,” என்று தெரிவித்தார்.

Tags : Central Government of Tamil Nadu ,Government of Tamil Nadu ,Madurai and ,Goa ,Minister ,Gold South Rasu ,Chennai ,Central Government ,Madurai ,Finance Minister ,Dangam Tennarasu ,
× RELATED சென்னை உட்பட 20 மாவட்டங்களில்...