×

எடப்பாடி பழனிசாமிக்கு 11வது தோல்வி ஸ்டிக்கரை ஒட்ட மக்கள் தயாராகிவிட்டனர்: பாளையங்கோட்டையில் முதலமைச்சர் பேச்சு

நெல்லை: திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திருவாரூரில் முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கி திருச்சியில் முடித்தார். இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் இருந்து இன்று தென் மாவட்ட பிரசாரத்தை தொடங்கினார்.

இன்று பாளையங்கோட்டை தெற்கு பைபாஸ் சாலையில் சரவணா ஸ்டோர்ஸ் எதிரில் உள்ள மைதானத்தில் நடந்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவு, பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல்வஹாப், நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் ஆகியோரை ஆதரித்து பேசினார். மேலும் நாங்குநேரி, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கும் ஆதரவு திரட்டினார்.

பாளையங்கோட்டையில் பேசிய முதலமைச்சர்; “பாளையங்கோட்டை எப்போதும் திமுகவின் கோட்டை. திமுகவின் 2.0 ஆட்சிக்கு நான் ரெடி, நீங்க ரெடியா?. நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன். இந்தியாவே தெற்கே திரும்பிப் பார்க்கக் கூடிய அளவுக்கு திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்துள்ளோம். ஐபிஎல் கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் பார்த்திருப்பீர்கள்; நாம் தேர்தல் அறிக்கையில் சிக்ஸர்கள் அடித்திருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி இருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியில் மலை அளவு சாதனைகளை செய்துள்ளோம். அதிமுக முதுகில் ஏறி அரசியல் பண்பாட்டு படையெடுப்பு நடத்துகிறது பாஜக. தமிழகத்தை கெடுக்க நினைக்கும் பாஜகவிடம் இருந்து காக்க வந்துள்ளேன். சுய சிந்தனை இல்லாமல், துரோகத்தின் மொத்த உருவமாக பத்து தோல்வி பழனிசாமி வாக்கு கேட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமியை அமித்ஷா ஆட்டுவிக்கிறார்.

மக்களை கேஸ் சிலிண்டருக்காக பிரதமர் மோடி காக்க வைத்துள்ளார். கொரோனா காலத்தில் காமெடி ஷோ நடத்தியவர் மோடி. தமிழ்நாட்டுக்கு எந்த திட்டங்களும் இல்லை என்பதே மோடி மாடல். பணமதிப்பிழப்பால் கோடிக்கணக்கான மக்களை ஏடிஎம் முன்பு காக்க வைத்தார் மோடி. உரிமைத் தொகை திட்டத்துக்கு குல விளக்கு என பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார் எடப்பாடி. மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து திமுகவின் திட்டங்களை காப்பி அடிக்கிறார் எடப்பாடி.

சொன்னதை மட்டுமல்ல சொல்லாதததையும் ஸ்டாலின் செய்வார் என மக்கள் நம்புகின்றனர். எடப்பாடி பழனிசாமி சொன்னதையும் செய்யமாட்டார்; சொந்தமாகவும் எதையும் செய்யமாட்டார். திமுக தேர்தல் அறிக்கைதான் சூப்பர் ஸ்டார் என்று குழந்தைகூட சொல்லும். எடப்பாடி பழனிசாமிக்கு 11வது தோல்வி ஸ்டிக்கரை ஒட்ட மக்கள் தயாராகிவிட்டனர். ஏனென்றால் களத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார். சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா திமுகவின் தேர்தல் அறிக்கை என்று சின்னக் குழந்தையும் சொல்லும்.

பாஜக, அதிமுக சதி செயலை முறியடித்து மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 கொடுத்துள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி இருக்கிறோம். பெண்களின் பாதுகாப்புக்காக அனைத்து நகரங்களிலும் பிங்க் ரோந்து நிலையங்கள் அமைக்கப்படும். கலைஞரின் மகன், சொன்னால் சொன்னதை செய்வேன்” என பேசினார்.

Tags : Edappadi Palanisami ,Minister ,Palayangota ,Nella ,Tamil Nadu ,Dimuka ,Mu Nella ,K. Stalin ,Thiruvaroor ,K. ,Stalin ,Southern District ,
× RELATED இரண்டாம் கட்ட பரப்புரை தொடக்கம்:...