- அமைச்சர் தங்கம்
- தென் ஆப்பிரிக்கா
- சென்னை
- அமைச்சர்
- தங்கம் தெற்கு ரசு
- நிதி அமைச்சர்
- தங்கம் தென்ராசு
- தமிழ்நாடு சட்டமன்றம்
சென்னை: 36 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில் அரசு 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளது என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.
இன்று தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் வளர்ச்சிக்காகத் தமிழக அரசு முன்னெடுத்து வரும் திட்டங்கள் குறித்துப் பேசியதாவது:
- 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி எனும் இலக்குடன் இயங்கும் தமிழ்நாடு அரசு, ‘உலக முதலீட்டாளர் மாநாடு’ ‘டிஎன் ரைசிங்’ போன்ற முன்னெடுப்புகள் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில் முதலீடுகளை மிகப்பெரும் அளவில் ஈர்த்து வருகிறது.
- இந்த அரசு பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் இதுவரை, 36 இலட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில், ரூ.12.37 இலட்சம் கோடி உறுதி அளிக்கப்பட்ட முதலீடுகளுக்கான 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
- மாநிலம் முழுவதும் தொழில் வளர்ச்சி சமச்சீராகப் பரவும் வகையில் மாவட்டந்தோறும் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடு அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு வரை 15 மாவட்டங்களில் 32,525 ஏக்கர் பரப்பளவில் 24 சிப்காட் தொழிற்பூங்காக்கள் செயல்பட்டு வந்த நிலையில், இவ்வரசு பொறுப்பேற்ற பின், மேலும் 12 புதிய மாவட்டங்களில் புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, தற்போது 49,468 ஏக்கர் பரப்பளவில் 54 தொழிற்பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், கூடுதலாக 28,392 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
- ‘தமிழ்நாடு அறிவுசார் நகரம்’ மற்றும் சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கர் பரப்பளவில் ‘உலகளாவிய நகரம்’ ஆகிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருப்பெரும்புதூரில் ரூ.706 கோடி மதிப்பீட்டில் 18,720 படுக்கை வசதிகள் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய பணியாளர் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசு மேற்கொண்ட இத்தகைய முன்னோடி நடவடிக்கைகளின் காரணமாக, தொழில் வளம் பெருகி, 2024-25ம் ஆண்டில் தமிழ்நாடு 11.19 சதவீதம் எனும் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டி, நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. மேலும், மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 41.23 சதவீதம் பங்களிப்புடன் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது.
- திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் மொத்தம் ரூ.1,070 கோடி மதிப்பீட்டில் புதிய டைடல் பூங்காக்கள் நிறுவப்பட்டு வருகின்றன. மேலும், விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர் மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில் டைடல் நியோ மினி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி, நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மொத்தம் ரூ.388 கோடி செலவில் மினி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்பட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை பரவலான முறையில் விரிவுபடுத்துவதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் 25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
- ‘தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் -2030’ எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்கான செயல்திட்டத்தின் அடிப்படையில், ரூ.500 கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்படும். மேலும், இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை உடன் இணைந்து சென்னை தரமணி பகுதியில், மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்ப மையம் மற்றும் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனைக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திறன்மிகு மையம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
- கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் இயந்திர உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை’ விரைவில் வெளியிடப்படும்போது, கப்பல் கட்டும் தொழிலில் ஒரு உலகளாவிய மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும். சிப்காட் நிறுவனம் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்துடன் இணைந்து, ஒரு சிறப்பு நோக்க நிறுவனம் மூலம் தூத்துக்குடியில் ரூ.5,200 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய கப்பல் கட்டும் தொகுப்பினை நிறுவி வருகிறது. கூடுதலாக, ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஒரு உலகளாவிய முன்னணி கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளிட்ட, முன்னணி கப்பல் கட்டும் நிறுவனங்களுடன் சுமார் ரூ.30,000 கோடி மதிப்புள்ள உறுதியான முதலீட்டுப் பொறுப்புறுதியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு ரூ.4,282 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
