சீர்காழி, பிப்.16: சீர்காழி கடைவீதி செல்வவிநாயகர் கோயில் முன்பு முதியவர் பஞ்சாட்சரம் என்பவர் புள்ளி கோலம் போட்டு அசத்தினார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடை வீதியில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது இக்கோயில் அருகே பிரேம் கடை வைத்திருக்கும் பஞ்சாட்சரம் (78). இவர் வெள்ளி, செவ்வாய் மற்றும் விசேஷ காலங்களில் கோயில் முன்பு அழகான புள்ளி கோலங்களை போட்டு வருகிறார்.
தற்போதைய காலத்தில் பெரும்பாலான பெண்களே கோலம் போட தெரியாமல் இருக்கும் நிலையில் பஞ்சாட்சரம் புள்ளிக்கோலம் விதவிதமாக விழா காலங்களில் போட்டு வருவதை அனைவரும் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர். நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு செல்வவிநாயகர் கோயில் முன்பு பஞ்சாட்சரம் அழகான புள்ளி கோலம் போட்டார். இதனை கடைவீதி வழியாகச் சென்ற வியாபாரிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்து சென்றனர்.
