திருவள்ளூர், பிப்.18: திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் ஒப்பனை, அழகுக் கலை இலவச பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரைவும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். கால அளவு 90 நாட்கள்.
மேலும், இப்பயிற்சி ராணிப்பேட்டை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இங்கு தங்கும் வசதிகள், உணவுகள் உள்பட செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும். பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்து, அந்நிறுவனத்தின் சார்பாக ஆரம்ப காலமாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரைவுடன் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். பயிற்சியில் சேருவதற்கு தகுதியான நபர்கள், தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
