மணலி, பிப்.18: மணலி மண்டலம், 19வது வார்டு, மாத்தூர் பகுதியில், பழைய இரும்பு பொருட்களை கையாளும் தனியார் குடோன்கள் அதிகளவில் உள்ளன. இதில், சில இரும்பு குடோன்கள் மாநகராட்சியின் அனுமதி இல்லாமல் இயங்குவதாக, வார்டு கவுன்சிலர் காசிநாதன், மணலி மண்டல குழு கூட்டத்தில் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மண்டல உதவி ஆணையர் (பொறுப்பு) தேவேந்திரன் தலைமையில், உதவி பொறியாளர் தர் மற்றும் வருவாய் பிரிவு அதிகாரிகள், மாத்தூர் பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது மாசிலாமணி நகரில் பழைய லாரிகளை உடைத்து இரும்பு பொருட்களாக மாற்றும் மையமாக செயல்பட்டு வந்த தனியார் குடோன் அனுமதியின்றி இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து, மண்டல அதிகாரிகள் இரும்பு குடோனை மூடி சீல் வைத்தனர். மேலும், அனுமதி இல்லாமல் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் குடோன்கள் குறித்து விரிவான ஆய்வு செய்து அதன் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
