ஒன்றிய பட்ஜெட், வர்த்தக ஒப்பந்தங்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளங்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ஒன்றிய பட்ஜெட் மற்றும் பல்வேறு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான அடித்தளங்கள் என்றும் இதில் தனியார் துறையும் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.

பிரதமர் மோடி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:
முந்தைய ஐமுகூட்டணி அரசு பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை செய்ய தவறி விட்டது. சமீபத்திய பட்ஜெட் மற்றும் ஒன்றிய அரசால் கையெழுத்திடப்பட்ட உலகளாவிய வர்த்தக ஒப்பந்தங்களும், வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான அடித்தளங்களாகும். மேலும் தனியார் துறை இப்போது இன்னும் தீவிரமாகவும்,தைரியமாகவும் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். விக்சித் பாரதத்தில் பெண்கள் முக்கியமான பங்கை வகிப்பார்கள். அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் கணிக்கக்கூடிய தன்மை ஆகியவை இந்தியாவில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளது.

வலுவான உற்பத்தி, சேவைகள் மற்றும் சிறிய,நடுத்தர தொழில்களினால் 38 நாடுகளுடன் வலிமையான நிலையில் இருந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்த உதவியுள்ளன.அதிக கட்டமைப்பு சீர்திருத்தங்கள், தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் சேவைகளில் புதுமைகளை ஆழப்படுத்துதல் மற்றும் குடிமக்கள் மற்றும் வணிகங்கள் அதிக எளிதாகவும் நம்பிக்கையுடனும் செயல்படக்கூடிய வகையில் எளிமையான நிர்வாகம் ஆகியவை வரும் முப்பதாண்டுகளுக்கான முன்னுரிமையாக இருக்கும்.

நமது பட்ஜெட்டுகள், ஒரு சாதாரண திட்டத்தை உருவாக்கும் மனப்பான்மையுடன் உருவாக்கப்படவில்லை என்பதை கூறுவேன்.கடந்த 25 ஆண்டுகளில் எனது அணுகுமுறையை கூர்ந்து கவனித்தால், நமது பணிகள் துண்டு துண்டாக நடக்கவில்லை என்பது தெளிவாகிறது.முழு தேசத்தின் சிந்தனை, நோக்கத்தின் தொடர்ச்சி மற்றும் நீண்டகால தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஒரு பரந்த உத்தி, செயல் திட்டம் மற்றும் பயனுள்ள செயல்படுத்தல் உள்ளது. நாங்கள் 38 நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளோம். இது இந்தியாவின் வர்த்தக வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்.

நமது தேசத்தில் ஒரு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பல்வேறு வகையான சவால்களின் காலங்களிலும் நமது தேசிய தன்மை தன்னை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் கடினமான உலகளாவிய சூழ்நிலைகளிலும் கூட நாம் வளர்ச்சியின் பிரகாசமான இடமாக இருக்கிறோம்.
ஒன்றிய பட்ஜெட் வேண்டுமென்றே குறுகிய கால ஜனரஞ்சகத்தைத் தவிர்த்து, வேலைவாய்ப்புகள் மற்றும் நிலையான வளர்ச்சியை அதிகரிக்க உள்கட்டமைப்பில் சாதனை மூலதனச் செலவினங்களைச் செலுத்தியுள்ளது.

ரயில்வேக்கு ரூ.3 லட்சம் கோடி மூலதனச் செலவு செய்யப்பட்டுள்ளது. அதிவேக இணைப்பு, சரக்கு திறன் மற்றும் பயணிகள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தெற்கு அதிவேக டயமண்ட் காரிடார் உட்பட முக்கிய இந்திய நகரங்களை இணைக்க ஏழு புதிய அதிவேக ரயில் காரிடார்கள் உருவாக்கப்படும்.இது கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரிக்கு கணிசமாக பயனளிக்கும். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது ஒரு தசாப்த கால பாதுகாப்பு சீர்திருத்தங்களின் நன்மைகள் தெளிவாகத் தெரிந்தது. பாதுகாப்பு சவால்களைச் சமாளிக்க இந்தியா எல்லா நேரங்களிலும் தயாராக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மோடியின் செட்அப் பேட்டி: காங். விமர்சனம்
பட்ஜெட் குறித்த பிரதமர் மோடியின் பேட்டியை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “பட்ஜெட் பற்றிய மோடியின் பேட்டி ஒரு நேர்காணல் அல்ல. அது மிக கவனமாக எழுதித்தரப்பட்டு, வாசிக்கப்பட்ட செட்அப் பேட்டி. வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்காவிடம் சரணடைந்ததால் முற்றுகை மற்றும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் பிரதமர் மோடி தற்போது தனது வழக்கமான தந்திரோபாயத்தை நாடி உள்ளார்.

இந்த ஆண்டு பட்ஜெட் ஒரு வெடிக்காத, ஈரமான பட்டாசு மற்றும் அறிவுசார் சோர்வின் ஒவ்வொரு அறிகுறியையும் காட்டுகிறது என்பது பிரதமருக்கு நன்றாக தெரியும். பட்ஜெட்டால் சந்தைகள் எதிர்மறையாக இருந்தன. முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படவில்லை. இதனால், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பதினைந்து நாள்கள் கழிந்த பின்னரும், அவர் பேட்டி கொடுக்க வேண்டிய அவசியத்தை உணர்கிறார்.

வழக்கம்போலவே பிரதமர் மோடியின் பேட்டியில் ஒன்லைனர்கள் மட்டுமே உள்ளன. அவை மிகவும் சிறியவை. லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு அவர் செய்த துரோகம் மற்றும் சரணாகதிகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப மோடி முயற்சிக்கிறார். அவரது நேர்காணல் என அழைக்கப்படுவது உண்மையில் நேர்காணல் இல்லை. கவனமாக எழுதப்பட்ட மற்றும் அவநம்பிக்கையின் பயிற்சி” என காட்டமாக விமர்சித்துள்ளார்.

Related Stories: