திருமலை: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது நடிகர் பவன் கல்யாண் குறித்தும், பவனின் அரசியல் பிரவேசத்தை எதிர்த்தும், அவர் ஒரு உண்மையான தலைவர் அல்ல, வெறும் ரீல் வங்க புலி என்று விமர்சித்து பொக்குலா ஸ்ரீனிவாஸ் என்ற எழுத்தாளர் ஒரு புத்தகம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த நேரத்தில், இந்த புத்தகம் பெரிதும் விவாதிக்கப்பட்டது. இதனால் எழுத்தாளர் பொக்குலா ஸ்ரீனிவாசுக்கு நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினரால் ஆபத்து இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் எழுத்தாளர் பொக்குலா ஸ்ரீனிவாஸ் நேற்று முன்தினம் கம்மத்தில் நடந்த ஒரு சாலை விபத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர் பயணித்த கார் குசுமஞ்சியில் உள்ள பலேரு நீர்த்தேக்கத்தில் பாய்ந்தது. பின் இருக்கையில் அமர்ந்திருந்த பொக்குலா ஸ்ரீனிவாஸ் தண்ணீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், கார் டிரைவர் தப்பியோடியதால் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஆகையால் சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
