புதுக்கோட்டை, பிப்.14: புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மாதாந்திர உதவித் தொகையை ரூபாய் 6 ஆயிரமாக உயர்த்தி வழங்கக்கோரி புதுக்கோட்டையில் நான்காவது நாளாக நேற்று மாற்றுத்திறனாளிகள் நடத்திய போராட்டத்தில் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
திரிபுரா, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூபாய் 15 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்த பட்சம் மாத உதவித் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.கணேஷ் தலைமை வகித்தார்.மாவட்ட துணைத் தலைவர்கள் எம்.சி.லோகநாதன், ஜி.கிரிஜா, நகரச் தலைவர் எஸ்.பாஷாபாய், செயலாளர் வி.ரமேஷ், எஸ்.பாஷ்சாபாய் உள்ளிட்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.
