சீர்காழி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்ககோரி சாலைமறியல்

சீர்காழி, பிப்.14: சீர்காழி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்ககோரி சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வள்ளுவக்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் நீர் நிலையில் கட்டப்பட்டுள்ளதாக அந்தப் பகுதியை சேர்ந்த தனிநபரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கின் அடிப்படையில் நீர்நிலையில் கட்டிடம் கட்டக் கூடாது, ஆகையால் வேறு இடத்திற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாற்ற வேண்டுமென உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடத்தை திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நேற்று வள்ளுவகுடியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தாசில்தார் அருள்ஜோதி, சீர்காழி டிஎஸ்பி அண்ணாதுரை, சீர்காழி இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன்பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Related Stories: