ராசிபுரம், பிப்.18: ராசிபுரத்தில் பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா கடந்த பிப்ரவரி 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டு, கட்டளைதார்களால் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று அதிகாலை அக்னி குண்டம் பற்றவைத்தலை தொடர்ந்து சுவாமி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக சக்தி கரகம் எடுத்து ராசிபுரம் முக்கிய வீதி வழியாக விரதமிருந்த பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மஞ்சள், சிவப்பு நிற ஆடைகளை அணிந்து கையில் வேப்பிலை, அக்கினி சட்டியுடன் ஊர்வலமாக வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
