1. கூட்டணி ஆட்சி தமிழகத்திற்கு ஒத்து வராது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன? தமிழ்நாட்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைமை தாங்கும் இயக்கம் திமுக. திமுக அமைத்துள்ள கூட்டணி மகத்தான வெற்றி பெறும். சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திராவிட மாடல் ஆட்சியை ஆருயிர் சகோதரர் மு.க.ஸ்டாலின் தொடர்வார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமிருக்காது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது 100க்கு 100 சரி என்று நான் வழி மொழிகிறேன்.
2. இந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக கூடுதல் இடங்களில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு உள்ளதா? தொகுதி பங்கீடு தொடர்பாக குழுக்கள் ஏதும் அமைக்கப்பட்டிருக்கிறதா? இதையெல்லாம் மற்ற கட்சியினரிடம் கேளுங்கள். நாங்கள் ஒரே பதில் தான். பேச்சுவார்த்தை நடத்தாமல் நான் எதையும் சொல்ல மாட்டேன். திமுக தொகுதி பங்கீடு தொடர்பாக குழுக்கள் அமைத்த பிறகு 3 மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்தும் அறிவிக்கப்படும்.
3. ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே? மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நிதி தராமல் உள்ளதே, அதுகுறித்து தங்கள் கருத்து என்ன? ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால் தமிழ்நாட்டில் பல திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என கனிமொழி எம்.பி., தெரிவித்த கருத்து 100க்கு 100 சதவீதம் உண்மை. அதை நான் வழி மொழிகிறேன்.
4. சட்டமன்ற தேர்தலுக்கு வைகோ எப்போது பிரசாரத்தை தொடங்குகிறார், அதற்காக திட்டமிடப்பட்டுள்ளதா? திமுகவின் வெற்றிக்கு எப்படி நான் ஒரு காலத்தில் முழு மூச்சாக பாடுபட்டேனோ, இப்போதும் அதே உணர்வுடன் இருப்பதால் தான் திருச்சியில் இருந்து மதுரை வரை 180 கிலோ மீட்டர், நாள்தோறும் லட்சக்கணக்கான மக்களை சந்தித்தேன். மதிமுக சோர்ந்து விடவில்லை, அது முடங்காது, அது அடிபட்ட வேங்கை சீறி எழுவது போல நிமிர்ந்து எழுந்து வீரநடை போடும். என் தோழர்களும் அப்படித்தான் நிற்கிறார்கள். எங்களுடைய இயக்கம் திமுகவுக்கு ஈட்டி முனையாக, உறுதுணையாக, பக்க அரணாக செயல்படும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
