சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டசபை தேர்தலில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றிக் கூட்டணியாக இருக்கும். நாங்கள் உழைப்பால் வெற்றி பெற்று வெற்றிக்கனியை விஜயகாந்த் காலடியில் சமர்ப்பிப்போம் என்று உறுதிமொழி எடுத்து இருக்கிறோம். கூட்டணி பேச்சுவார்த்தை (திமுக மற்றும் அதிமுக-பாஜ பக்கமும்) தொடர்பாக நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள், அதற்கு நான் பதில் சொல்வதை விட உரியவர்களே உங்களுக்கு பதில் கொடுத்து விட்டார்கள்.
நீங்கள் ஒரு கேள்வி கேட்கிறீர்கள். அதற்கு பதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி, பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பதில் கொடுத்து இருக்கிறார்கள். அதனால், அந்த கேள்வியை திருப்பி திருப்பி என்னிடம் கேட்காதீர்கள். எங்கள் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் எந்த கூட்டணியை விரும்புகிறார்களோ? அந்த கூட்டணியை தான் இந்த முறை தேமுதிக அமைக்கும் என்பதை மீண்டும் இந்த நாளில் உறுதியாக சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
எப்படி கூட்டணியை அறிவிப்பீர்கள் என்று அடுத்த கேள்வியை கேட்பீர்கள். உண்மையில் இந்த கேள்வியை கேட்க வேண்டியது எங்கள் மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தான். அவங்களே கூலாக இருக்கிறார்கள். ஹேப்பியாக இருக்கிறார்கள். அவங்களே நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது பத்திரிகையாளர்கள் மட்டும் ஏன் இந்த அளவுக்கு டெய்லி கேட்ட கேள்வியை கேட்கிறீங்க என்று தெரியவில்லை.
தேமுதிக எங்கள் கட்சி. தேமுதிக என்ன முடிவு எடுக்க வேண்டும். எப்போ அறிவிக்க வேண்டும் என்பதை உரிய நேரத்தில் எங்கள் கட்சியை சேர்ந்தவர்களிடம் கலந்து பேசி உறுதியாக அறிவிப்பேன். சோ கூலாக இருங்கள். நோ டென்சன், பி கூல். கூட்டணி அமையாதது, தாமதம் என்பது உங்கள் கற்பனைக்கு உட்பட்டது.
உரிய நேரத்தில் எங்களுடைய அறிவிப்பை நாங்கள் தெரிவிப்போம். தலைமை கழகம் அறிவிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டுமே உறுதியானது, இறுதியானது. தேமுதிக ஒரு கண்ணியமான கட்சி. கேப்டனால் உருவாக்கப்பட்ட கட்சி. அதனால், யாருடைய கருத்தும் எங்களை பாதிக்காது. ஏனென்றால் எங்களுக்கு மடியில் கணம் இல்லை. வழியில் பயம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
* விருப்ப மனு விநியோகம் மேலும் 3 நாள் நீட்டிப்பு: தேமுதிக தலைமை அறிவிப்பு
சட்டசபை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரி 30 சட்டமன்ற தொகுதியிலும் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.
தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் அனைவரின் விருப்பத்திற்கு இணங்க மூன்று நாட்கள் நீட்டிப்பு செய்து விருப்ப மனுக்களை 13ம் தேதி (இன்று) முதல் 15ம் தேதி மாலை 5 மணி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள (கேப்டன் ஆலயம்) தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
