பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பினர் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலை அறிவியல் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் 87 பேர் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் கூட்டமைப்பு நிர்வாகி ஆனந்தன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென தவெக திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் 15 பேர் கல்லூரிக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த விரிவுரையாளர்களிடம், போராட்டத்துக்கு ஆதரவு தர வந்திருப்பதாக தெரிவித்தனர். அதை ஏற்க மறுத்த விரிவுரையாளர்கள், ‘‘போராட்டம் கல்லூரி வளாகத்தில் நடப்பதால் நீங்கள் வரக்கூடாது. அப்படி வருவது எங்களுக்கு தான் பிரச்சனை ஏற்படுத்தும்’’ என்றனர். அப்போது மாவட்ட செயலாளர் ராஜா, ‘‘உங்கள் கோரிக்கையை எங்களால் தான் நிறைவேற்ற முடியும், நாங்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.
போராட்டத்துக்கு ஆதரவு தர விடுங்கள்’’ என்றார். அதற்கு விரிவுரையாளர்கள், ‘‘உங்களுக்கு எங்களது கோரிக்கை என்னவென்றே தெரியவில்லை. நாங்கள் கல்லூரிக்கு வெளியில் நடத்தினால் அப்போது வந்து ஆதரவு கொடுங்கள். இப்போது இடத்தை காலி செய்யுங்கள்’’ என்று விரட்டி உள்ளனர்.
சிறிது நேரம் மட்டும் போராட்டத்தில் கலந்து கொள்கிறோம் என தவெகவினர் அடம் பிடித்தனர். ஆனால் விரிவுரையாளர்கள் அதை ஏற்க மறுத்து விட்டனர். அப்போதும் தவெகவினர் அடங்க வில்லை. போராட்டத்துக்கு ஆதரவாக இருப்பது போல் போட்டோ எடுத்துக்கொண்டனர். பின்னர் ஒரு ஓரமாக 10 நிமிடம் நின்று விட்டு பின்னர் அங்கிருந்து இடத்தை காலி செய்தனர்.
