திருச்செந்தூர் அருகே 50 ரூபாய் மருத்துவர் என்று அழைக்கப்பட்ட மருத்துவர் பொன்னையா காலமானார்!!

நெல்லை : திருச்செந்தூர் அருகே 90வது வயதில் குறைந்த செலவில் மருத்துவம் பார்த்த மருத்துவர் காலமானார். திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி மெயின் பஜாரில் சுமார் 45 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி குறைந்த செலவில் மருத்துவம் பார்த்து வந்தவர் மருத்துவர் பொன்னையா. அரசு மருத்துவமனை , மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றிய போது ஆறுமுகநேரியில் கிளினிக் துவங்கினார். பல்வேறு மருத்துவமனைகளில் 50, 100, என மருத்துவ செலவு ஆன காலத்தில வெறும் ரூ10, ரூ.20க்கு உரிய மருந்துகளுடன் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார்.

இதனால் மருத்துவர் பொன்னையா கிளீனிக்கிற்கு மிகவும் ஏழை, எளிய மக்கள் வந்து மருத்துவம் பார்த்து சென்றனர். இதனால் டாக்டர் பொன்னையா இப்பகுதி மக்களுக்கு 50 ரூபாய் டாக்டர் என்றும் மிகவும் அன்பான டாக்டர் என்றும் அழைக்கப்பட்டார்.அரசு மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு திருநெல்வேலியில் ஓய்வுக்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளாக பேருந்தில் வந்து மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கூட மருத்துவம் பார்த்துவந்த டாக்டர் பொன்னையா இன்று அதிகாலை திருவனந்தபுரத்தில் வைத்து காலமானார்.

டாக்டர் மறைவு செய்தி கேட்ட ஆறுமுகநேரி பொதுமக்கள் ஆழ்ந்த வருத்தமடைந்தனர். அவரது உடல் இன்று இரவு கடந்த 45 ஆண்டுகளாக மருத்துவ சேவை செய்து வந்த கிளீனிக்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளனமான பொதுமக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அப்போது மருத்துவர் பொன்னையாவின் உறவினர்களிடம் ஆறுதல் கூறிய ஊர்மக்கள் அவரின் பிரிவு குறித்து வருத்தம் தெரிவித்தனர். மேலும் தங்களின் வீட்டில் ஒருவர் அவரை போல் ஆறுமுகனேரியில் அவர் நடத்தி வந்த கிளினிக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Related Stories: