வேளாங்கண்ணியில் பைனான்சியர் கொலை வழக்கு சாமியார் வேடத்துடன் தலைமறைவாக இருந்தவர் கைது

*கஞ்சா கடத்தி வந்தபோது தனிப்படையிடம் சிக்கினார்

நாகப்பட்டினம் : வேளாங்கண்ணியில் பைனான்சியர் கொலை வழக்கில் சாமியார் வேடத்துடன் தலைமறைவாக இருந்தவரை நாகப்பட்டினம் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பைனான்ஸ் நடத்தி வந்த தெற்கு பொய்கைநல்லூரை சேர்ந்த மனோகர் (35) என்பவரை கடந்த 2022ம்ஆண்டு மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து 16 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தலைமறைவான முக்கிய குற்றவாளியான வேளாங்கண்ணி ஆரியநாட்டு தெருவை சேர்ந்த கிரேட்டன் (எ) ரோசரி கிரேட்டனை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் வேளாங்கண்ணி அருகே உள்ள தனியார் கல்லூரியில் கஞ்சா மயக்கத்தில் மாணவர், பேராசிரியர்களிடம் அடிக்கடி தகராறு செய்வதாக போலீசாருக்கு புகார் வந்தது. எஸ்பி பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி நிக்சன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில், வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் இருந்து ‘கிளப்ஹவுஸ்’ என்ற செயலி மூலம் கஞ்சா விநியோகம் செய்யப்படுவதும், ரோசரி கிரேட்டனின் ‘கிளப்ஹவுஸ்’ என்ற செயலி மூலமாக பைனான்சியர் மனோகர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

சென்னையில் இருந்து தஞ்சாவூர் வழியாக வேளாங்கண்ணிக்கு கஞ்சா கடத்தி வந்த கிரேட்டனை நேற்றுமுன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது டூவீலரில் தப்பிக்க முயன்ற போது கீழே விழுந்ததால் ரோசரி கிரேட்டனின் கால்கள் முறிந்தது. இதனையடுத்து அவர், நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், ரோசரி கிரேட்டன் மீது கொலை வழக்குகள் பல்வேறு காவல்நிலையங்களில் நிலுவையில் இருப்பதும், ‘கிளப்ஹவுஸ்’ என்ற செயலி மூலம் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விநியோகம் செய்வதும், யாரும் அடையாளம் கண்டு விடக்கூடாது என்பதற்காக கடந்த 2023ம் ஆண்டு முதல் சாமியார் வேடமிட்டு, தாடி வளர்த்துக்கொண்டு சுற்றி திரிந்து வந்ததும் தெரியவந்தது.

Related Stories: