‘இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்காதே’ உருக்கமான கடிதம் எழுதி வைத்து 2 மகள்களை கொன்று தாய் தற்கொலை

*காதலித்து மணந்தவருக்கு நேர்ந்த கதி

திருமலை : வீட்டு செலவுக்கு கணவர் பணம் தர மறுத்ததால் 2 மகள்களை கொன்று தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சித்தூர் அருகே நடந்துள்ளது.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தூர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சிவசங்கர், ஸ்ரீசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார். இவரது மனைவி பத்மா(32).

இவர்கள் 2 பேரும் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர். இவர்களது மகள்கள் தேஜாஸ்ரீ(7), லாஸ்யா(5). இந்நிலையில் சிவசங்கர் சரியாக வேலைக்கு செல்லவில்லையாம்.

இதனால் குடும்ப செலவுக்கு பணம் தரவில்லை என தெரிகிறது. இதனால் வேதனையடைந்த பத்மா, நேற்றுமுன்தினம் மாலை தனது 2 மகள்களை தூக்குப்போட்டு கொன்றுவிட்டு, தானும் தூக்கில் தற்கொலை செய்து கொண்டார்.

அன்றிரவு வீடு திரும்பிய சிவசங்கர், இதனை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தெரிவித்தார். அதன்பேரில் வந்த போலீசார், தாய், 2 மகள்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது பத்மா தற்கொலைக்கு முன் உருக்கமாக எழுதிய கடிததத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது நிலை, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்யும் பெண்ணின் வாழ்க்கைக்கு ஒரு பாடம்.

கணவரிடம் என்னென்ன குணங்கள் இருக்கக்கூடாதோ, அத்தனை குணங்களும் எனது கணவரிடம் உள்ளன. எனது கணவரை மணந்த பாவத்திற்காக, நான் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்திருக்கிறேன். என் வயிற்றில் பிறந்த பாவத்திற்காக, என் குழந்தைகளும் அதே கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்.

வீட்டுச்செலவுகளுக்குக்கூட பணம் கேட்காத ஒரு பெண் இருந்தால், அவளை சந்தோஷப்படுத்து. நீ எப்படியும் மறுபடியும் வேறு கல்யாணம் செய்வாய். இந்த முறையாவது, நீ வாழ்க்கையில செட்டிலாயிட்ட பிறகு அதைச்செய். என்னைப்போல இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் நாசமாக்காதே.

இன்னொரு ஜென்மத்திலாவது, என் பெற்றோர் பார்க்கும் உறவுடன் என் குடும்பத்தோட வாழணும்னு கடவுளை வேண்டிக்கிறேன். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

`கடைசியா ஒரே ஒருமுறை பாப்பான்னு கூப்பிடுங்க அண்ணா’

பத்மா, காதல் திருமணம் செய்த பின்னர் தனது உடன்பிறந்த அண்ணனுடன் பேச்சுவார்த்தை இல்லை எனக்கூறப்படுகிறது. இருப்பினும் தனது தற்கொலைக்கு முன்னர் அதே கடிதத்தில் தனது அண்ணன் குறித்தும் பத்மா குறிப்பிட்டுள்ளார். அதில், `அண்ணா (தனது சகோதரர்) என்னை மன்னித்து விடுங்கள். இதுவரை நான் உங்ககிட்ட பேசவில்லை என்பதற்காக உங்க மேல அன்பு இல்லை என அர்த்தம் இல்லை அண்ணா.

உங்களை எதிர்கொள்ள எனக்கு தைரியம் இல்லாதவளாகி விட்டேன். உங்க எந்த கேள்விக்கும் நான் பதில் சொல்லி 8 வருஷம் ஆச்சு. உங்க வாயில இருந்து கடைசியா ‘பாப்பா’ன்னு கூப்பிட்டு என்னையும் என் குழந்தைகளையும் வந்து பாருங்க அண்ணா. நீங்க எங்களை மறுபடியும் பார்க்கணும்னு நினைச்சாலும், நாங்க இங்க இருக்க மாட்டோம். ஒரே ஒரு தடவை ‘பாப்பா’ அப்படின்னு கூப்பிடுங்க, அண்ணா. சாரி அப்பா.. இவ்வாறு கடிதத்தில் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: