இளம்பெண்ணை சிறைவைத்து பலாத்காரம் செய்த சமூக வலைதள பிரபலம் கைது

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஷாமிக் அதிகாரி என்பவர், சமூக வலைதளங்களில் ‘நான்சேன்’ என்ற பெயரில் நையாண்டி வீடியோக்கள் மற்றும் அரசியல் விமர்சனங்களை வெளியிட்டு மிகவும் பிரபலமானவர். குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள குறைகள் தொடர்பாகப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்த இவர், ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசிற்கு எதிரான நிலையில் இயங்கி வந்தார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி 22 வயது இளம்பெண் ஒருவரைத் தனது வீட்டில் சுமார் 20 மணி நேரம் சட்டவிரோதமாகச் சிறை வைத்ததாக ஷாமிக் அதிகாரி மீது புகார் எழுந்தது.

அந்தப் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்ட புகாரின் பேரில், பெஹாலா போலீசார் கடந்த 4ம் தேதி அவரைக் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் இருந்த காயங்கள் குறித்த மருத்துவ ஆதாரங்களை போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, அலிப்பூர் நீதிமன்றம் அவரை வரும் 16ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்
ளது. இது குறித்து ஷாமிக் அதிகாரியின் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ‘இருவரும் நீண்ட கால நண்பர்கள், அவர்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட வாக்குவாதத்தில் அவர் அந்தப் பெண்ணை அறைந்தாரே தவிர, பாலியல் ரீதியான தாக்குதலில் ஈடுபடவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: