சென்னை: தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் நேற்று தொடங்கின. பத்தாம் வகுப்புக்கு 23ம் தேதி தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது.
அதன்படி, பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 3ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரையும் நடக்க உள்ளது. இந்நிலையில், பிளஸ் 2 வகுப்புக்கு செயல்முறை தேர்வுகள் பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கு 23ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் நேற்று தொடங்கியுள்ளன. இவை இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட உள்ளன. முதல் சுற்று நேற்று தொடங்கி 12ம் தேதி வரை நடக்கிறது. முதல் சுற்றில் 290 பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கின்றனர். இவர்களுக்காக 206 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் சுற்று 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கும். இதில் 284 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இவர்களுக்காக 205 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர கடந்த ஆண்டில் பிளஸ் 1 வகுப்பு செய்முறைத் தேர்வில் தோல்வி அடையாத மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கும்.
பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில், சென்னை நந்தனம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் நேற்று அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: செய்முறைத் தேர்வுகளை பொருத்தவரையில் அந்த மையங்களை பார்வையிட்டேன்.
மாணவ, மாணவியர் பதற்றம் இல்லாமல் உற்சாகத்துடன் தேர்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். உறுதியளிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தை பலர் விமர்சனம் செய்கின்றனர். அந்த கோரிக்கை நிறைவேற்ற முடியாது என்ற நிலையில் நாங்கள் அதை செய்து காட்டியுள்ளோம். அதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் தான் இதை விமர்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
