தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு திமுகவில் தொகுதி பங்கீடு குழு: வீடு, வீடாக பிரசாரம் தொடக்கம்

 

சென்னை: சட்டமன்ற தேர்லை சந்திக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மாநாடு, பொதுக்கூட்டம், வீடு வீடாக பரப்புரை என்று திமுக அதிரடி காட்டி வருகிறது. அதே நேரத்தில் கடந்த தேர்தலை போல தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு தொகுதிப் பங்கீட்டு குழுவையும் அமைக்க திட்டமிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது.

இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் தீவிரமாக நடந்து வருகிறது. திமுகவில் உள்ள தற்போதைய கூட்டணி கடந்த 2019ம் ஆண்டு முதல் தொடர்கிறது. தொடர் வெற்றிகளையும் பெற்று வருகிறது.

அதாவது காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், தவாக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து திமுக கூட்டணியில் பயணிக்கின்றன. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலிலிருந்து மக்கள் நீதி மய்யமும் திமுக கூட்டணியில் இருந்து வருகிறது. இதுதவிர கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, மனிதநேய ஜனநாயகக் கட்சிகளும் திமுக கூட்டணியில் உள்ளன.

2026 தேர்தலில் தேமுதிக, ராமதாஸ் பாமக போன்ற மேலும் சில கட்சிகளும் திமுக கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியொரு பிரமாண்ட அணி, 2019 தேர்தல் முதல் தொடர் வெற்றி, கருத்துக்கணிப்பு முடிவுகள் என திமுக மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இது எதிர்தரப்பை கடும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அதனால் தான், திமுக கூட்டணி உடையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால், அதற்காக வாய்ப்பு ஏற்படவில்லை. திமுக வழக்கமாகக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஒரு குழுவை அமைக்கும். அந்தக் குழுவினர் கூட்டணிக் கட்சித் தலைவர்களோடு கலந்தாலோசித்து தொகுதிகளின் எண்ணிக்கை, எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் போன்ற முடிவுகளை எடுப்பார்கள்.

கூட்டணி வலுவாக இருந்தாலும் திமுக இன்னும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுக்கான குழுவை அமைத்து பேச்சு வார்த்தையைத் தொடங்கவில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழுவை அமைத்துள்ளது. கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவின் அழைப்பிற்காக காத்திருக்கிறது.

அதே நேரத்தில் அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் இன்னும் தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஏன் தொகுதிப் பங்கீடு குறித்து தாமதம் ஏற்படுகிறது என விசாரித்த போது திமுகவின் நடவடிக்கை வழக்கமானதுதான் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2021 சட்டமன்றத் தேர்தலின் போதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 26-2-2021 அன்று தான் திமுகவின் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பு நடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மார்ச் 4ம் தேதி தேர்தல் தேதி வெளியானது.

கூட்டணி பேச்சுவார்த்தை குழுவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதாவது மார்ச் 12ம் தேதி திமுக அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு 8 நாள் கழித்துத்தான் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவையே திமுக அமைத்தது. இந்த முறையும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்குப் பிறகுதான் திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான குழுவை அமைக்கும் என்று திமுக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திமுகவைப் பொறுத்தவரை கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாவிட்டாலும் தேர்தல் பரப்புரையை பல மாதங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. மண்டல வாரியாக இளைஞரணி, மகளிரணி மாநாடுகள், 234 தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முக்கியப் பிரமுகர்களுடன் ஆலோசனை, வீடுவீடாகப் பரப்புரை என்று தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறது.

ஆனாலும் தொகுதி பங்கீட்டை மட்டும் ஏன் திமுக தாமதம் செய்கிறது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கினால் ஏற்கனவே திட்டமிட்டு முதல்வர் பங்கெடுத்து வரும் மாவட்ட அரசு திட்டங்கள், தொடங்கி வைத்துக் கொண்டிருக்கும் செயல்பாட்டில் தொய்வு ஏற்படலாம்.

அரசின் நடவடிக்கைகள், மக்கள் நலத்திட்டங்கள் அவற்றிற்கே முக்கியத்துவம் கொடுத்து முதல்வர் ஸ்டாலின் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதுதவிர பிப்ரவரி 17ம் தேதி தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதுதொடர்பான பணிகள், பட்ஜெட் கூட்டத் தொடர் போன்ற பணிகளை நிறைவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்த பிறகுதான் அடுத்த நிதியாண்டுக்கான அரசின் நிதியைக் கையாள முடியும்.

நிதியாண்டு தொடங்கும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அரசின் செலவுகளுக்கும் தேர்தல் செலவுக்கும் அரசின் கஜானாவில் இருந்து பணம் எடுக்க இயலும். இத்தனை பணிகள் இருப்பதால்தான் தொகுதிப் பங்கீடு குழுவை அமைக்கவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சு வார்த்தையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Related Stories: