செம்பாட்டூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

*அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்

புதுக்கோட்டை : கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் செம்பாட்டூர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ முகாமை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் மெய்யநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் நேற்று தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவமான அடையாள அட்டைகளை வழங்கினர். காலை 9 மணிக்கு தொடங்கிய முகாம் மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்று பல்வேறு சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை எளிய பொதுமக்கள் நோயில்லா நல்வாழ்வு வாழ்ந்திடும் வகையில் பல்வேறு மருத்துவம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் அந்த வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு வட்டாரத்திற்கு மூன்று மருத்துவ முகாம்கள் வீதம் 2025- 26ம் நிதி ஆண்டில் 42 மருத்துவ முகாம் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 38 நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு சராசரியாக ஒவ்வொரு முகாமிற்கு 1400 க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் முகாமில் பங்கேற்று பயன டைந்துள்ளார்கள். அதன் அடிப்படையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் செம்பாட்டூர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.முகாமில் 40 வயதிற்கு மேற்பட்டோர் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையவர், இதய நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இந்த முகாம்களில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்துவ முகாமில் பயனாளிகள் பரிசோதனை விவரங்கள் குறுஞ்செய்தி வாயிலாக அவர்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

அனைத்து பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது மேலும், பொது மருத்துவ நிபுணர் அறிவுறுத்தலின் படி எக்ஸ்ரே, எக்கோ, கார்டியோகிராம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் பெண்களுக்கான கர்ப்பப்பை, மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. மேலும், முகாமில் பங்கு கொள்ளும் மருத்துவ பயனாளர்களுக்கு 17 சிறப்பு நிபுணர்களை கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது.

பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், இயன்முறை மருத்துவம், கண் மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம் நுரையீரல் மருத்துவம், நீரிழிவு நோய் மருத்துவம், ஸ்கேன், எக்கோ பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் மட்டுமின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு அங்கீகாரம் சான்றிதழ்கள் முகாமில் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

1256 முகாம்கள்…

ஒரு வட்டத்துக்கு மூன்று முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1164 முகாம்களும் ஒரு மண்டலத்திற்கு ஒரு முகாம் விகிதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும் ஒரு மாநகராட்சிக்கு நாலு முகாம்கள் வீதம் 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள ஐந்து மாநகராட்சிகளில் 20 முகாம்களும் ஒரு மாநகராட்சிக்கு மூன்று முகாம்கள் வீதம் மக்கள் தொகை பத்து லட்சத்திற்கு குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும் என மொத்தம் 1256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்ட நடைபெற்று வருகிறது.

Related Stories: