கார் டிக்கியில் அமர்ந்து இளைஞர்கள் பயணித்த விவகாரம் டிரைவர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு

*லைசென்ஸ்சை ரத்து செய்யவும் ஆர்டிஓவுக்கு பரிந்துரை

தென்காசி : தென்காசியில் காரின் டிக்கியில் அமர்ந்து இருவர் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி பகுதியில் நான்கு சக்கர வாகனத்தின் டிக்கியில் இரண்டு இளைஞர்கள் அமர்ந்து பயணம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தென்காசி மாவட்ட எஸ்பி மாதவன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், வாடகை காரில், நெல்லையில் இருந்து குற்றாலத்திற்கு ஓர் குடும்பத்தை அழைத்து வந்ததாகவும், அவ்வாறு வரும் வழியில் இது போன்ற பயணம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதுபோன்று அபாயகரமான முறையில் பயணம் செய்வதை அனுமதித்த நெல்லை, பேட்டை பகுதியை சேர்ந்த வாகன ஓட்டுநர் ராஜசேகர் மீது தென்காசி போக்குவரத்து போலீசார் இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரின் வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வாகனத்தை அதிவேகமாகவும், ஆபத்தான முறையில் இயக்குதல், 18 வயது நிரம்பாத சிறுவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மற்றும் சாலை விதிகளை மீறுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறையினரால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விதிகளை மதித்து விபத்தில்லா பயணம் செய்வோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: