புதுடெல்லி: ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று, தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன், அர்ஜுன் பாபுடா உலக சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றனர். புதுடெல்லியில் ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த கலப்பு குழு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் – அர்ஜுன் பாபுடா இணை மிக சிறப்பாக செயல்பட்டு 505 புள்ளிகளை குவித்தனர்.
இந்த பிரிவில் புதிய உலக சாதனை படைத்த இவர்கள், முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர். கொரியாவை சேர்ந்த கிம் வூரிம்-க்வோன் யூன்ஜி 501 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்து வெள்ளி, ஜப்பானின் நவோயா ஒகடா-மிசாகி நொபாடா இணை 437.9 புள்ளிகளுடன் 3ம் இடம் பிடித்து வெண்கலம் வென்றனர். இந்த தொடரில் சீனியர் பிரிவு போட்டிகளில் இந்தியா 9 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளது.
