புதிய கட்சி தொடங்கி திருமங்கலம் தொகுதியில் களமிறங்க சசிகலா முடிவு

தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. என்டிஏ கூட்டணியில், சில மாதங்களுக்கு முன்பு வரை சசிகலா- டிடிவி தினகரன்- ஓபிஎஸ் சேர்ந்து களமிறங்கலாம் எனச் சொல்லப்பட்டது. செங்கோட்டையன் கூட இவர்களுக்கு ஆதரவாக இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், சில மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் ஐக்கியமாகிவிட்டார். டிடிவி தினகரன் அமமுக கட்சியை என்டிஏ கூட்டணியில் சேர்த்து விட்டார். ஓபிஎஸ் கூட எடப்பாடி தலைமையை ஏற்கத் தயாராகிவிட்டார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக வரிசையாக விலகிச் செல்லவே, அவரும் வேறு வழியில்லாமல் இருக்கிறார். அதேபோன்று சசிகலா எந்தவொரு முடிவையும் எடுக்காமலேயே இருந்து வருகிறார்.

தமிழக அரசியலில் பேராளுமையான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும் ஒரு முக்கிய தலைவராகப் பார்க்கப்படுகிறார். சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆன பிறகு அதிமுகவை மீட்டெடுக்க போவதாக சொல்லி வந்த சசிகலாவுக்கு, எடப்பாடி பழனிசாமியின் விடாப்பிடியான எதிர்ப்பு முட்டுக்கட்டையாக அமைந்தது. அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். அம்மா ஆட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் சசிகலா.

ஆனால், அந்த முயற்சிகளில் தொடர் தோல்விகளை சந்தித்தது. மேலும் அவரது தென் மாவட்ட சுற்றுப்பயணம் உள்ளிட்ட அவரது முயற்சிகள் பெரிய அளவில் எடுபடவில்லை. மேலும் சசிகலாவுக்கு எதிராக நடக்கும் உள்ளடி வேலைகள் ஒவ்வொன்றும் அவருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது அவர் எடுத்துள்ள தனி ரூட் முடிவு அதிமுக வட்டாரங்களை உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது.

வீட்டில் இருந்தபடியே அதிமுகவில் பலரிடமும் ரகசியமாக பேசி வருவதாகக் கூறப்படுவது உண்டு. அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக ஸ்லீப்பர்செல்கள் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அண்ணா நினைவு நாளில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலாவிடம் சட்டசபைத் தேர்தல் தொடர்பாகவும் அதில் அவரது நிலைப்பாடு என்ன என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் வரும் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று மட்டும் பதிலளித்தார்.

இதனால், சசிகலாவின் அடுத்த கட்ட நகர்வுகள் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன. ஏதோ பெரிய திட்டத்துடன் தன்னுடைய அரசியலை மீண்டும் செயல்படுத்த வருவது போன்று உள்ளதாக கருதப்படுகிறது. இதற்கிடையே, நேற்று தனது ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் பலரும் சசிகலா சட்டசபைத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியதாகத் தெரிகிறது. மேலும், புதிய கட்சி தொடங்குவது குறித்தும் சசிகலா ஆலோசித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் சில நாட்களில் சசிகலா புதிய கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.  அப்படி சசிகலா தனிக்கட்சியை ஆரம்பித்தால் அது பெரிய ட்விஸ்ட்டாகவே இருக்கும். மேலும், அவரால் திமுக கூட்டணிக்கு வர முடியாது. என்டிஏ கூட்டணிக்கும் அவர் செல்ல வாய்ப்பு கிடையாது. எனவே, விஜய்யுடன் சேர்வது அல்லது தனித்து சில குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டுமே நிற்பது என இரண்டு ஆப்ஷன்கள் மட்டுமே அவரிடம் இருக்கும். எனவே, அவர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவுகிறது.

இந்த பரபரப்பான சூழல், திருமங்கலம் தொகுதியில் சசிகலா போட்டியிட முடிவு செய்துள்ளதாக ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது. அதற்கான பணிகளை அவர்கள் தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய கட்சி அறிவிப்பு வெளியானதும் அவரது ஆதரவாளர்களையும் குறிப்பிட்ட தொகுதிகளில் நிறுத்த வாய்ப்புள்ளதாம்.

எனவே, சசிகலாவின் புதிய கட்சி அறிவிப்பு, திருமங்கலம் தொகுதியில் போட்டியிடும் முடிவு போன்றவை அதிமுக மற்றும் அமமுகவின் ஓட்டுக்களை பிரிக்கும் செக் ஆக அமையும் என்று ஆதரவாளர்கள் நம்புகின்றனர். இதுவரை அமைதி காத்த சசிகலாவின் இந்த அதிரடி பாய்ச்சல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: