மகளிர் வேலைவாய்ப்பு திட்ட அறிவிப்பால் பீகார் தேர்தலை எதிர்த்த மனு உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

புதுடெல்லி: கடந்த ஆண்டு பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அதில் போட்டியிட்ட முன்னாள் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கிடையே, தேர்தலுக்கு சற்று முன்பாக ஆளும் ஐக்கிய ஜனதா-பாஜ கூட்டணி அரசு மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தை அறிவித்தது. இது தேர்தல் நடத்தை விதி மீறல் என்பதால், தேர்லை ரத்து செய்யக் கோரி ஜன் சுராஜ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.யு.சிங் ஆஜராகி, ‘‘வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்ட திட்டம் தேர்தலுக்கு சற்று முன்பு அறிவிக்கப்பட்டது. அதே போல, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போது 35 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ.10,000 பணம் வழங்கப்பட்டது. இது மற்ற அரசியல் கட்சிகளுக்கு சமமான வாய்ப்பை மறுப்பதாக உள்ளது’’ என்றார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘‘நீங்கள் எத்தனை வாக்குகள் பெற்றீர்கள்? மக்கள் உங்களை நிராகரித்த பிறகு, தேர்தல் தோல்விக்கு பிறகு புகழ் பெற நீதிமன்றத்தை பயன்படுத்துகிறீர்களா? அந்த திட்டத்தை அப்போதே சவால் செய்திருக்க வேண்டும். அதை விட்டு தோல்வி அடைந்த பிறகு முழு மாநிலத்தின் தேர்தலை செல்லாது என அறிவிக்க விரும்புகிறீர்கள். இதை விசாரிக்க முடியாது. ஒரு மாநிலம் சம்மந்தப்பட்ட இப்பிரச்னைக்கு உயர் நீதிமன்றத்தில் முறையிடுங்கள். அதே சமயம், தேர்தல் இலவசங்கள் தொடர்பாக பல பிரச்னைகள் உள்ளன. அதை நாங்கள் தீவிரமாக ஆராய்வோம்’’ என்றார்.

Related Stories: