தமிழக அரசின் ஓய்வு ஊதிய திட்டம் அறிவிப்புக்கு ஜாக்டோ-ஜியோ நன்றி அறிவிப்பு மாநாடு

சென்னை: ஓய்வு ஊதிய திட்டத்துக்கு தமிழகம் தான் முன்னோடியாக இருக்கிறது. இந்த ஓய்வு ஊதிய திட்டத்தை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார். அவரை ெகாண்டாடுகிறோம் என்று ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஓய்வு ஊதியம் அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிக்கும் வகையில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் 8ம் தேதி நன்றி அறிவிப்பு மாநாட்டை ஜாக்டோ-ஜியோ நடத்துகிறது.

இதற்கான அழைப்பிதழ்களை ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், தலைமைச் செயலகம் சென்று முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நேரில் வழங்கினர். அதற்கு பிறகு ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ், கு.தியாகராஜன் அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் வைக்கப்பட்டு வரும் கோரிக்கையான பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அதை கொண்டாடியும் வருகின்றனர். இந்த மகிழ்ச்சி எங்களுக்கு மட்டும் மகிழ்ச்சி அளிக்கவில்லை, அரசுக்கும் மகிழ்ச்சிதான். ஏனென்றால், ஓய்வு ஊதிய திட்ட அறிவிப்பு என்பது இந்த அரசு கிடைத்துள்ள வரலாற்று அறிவிப்பாக அமைந்து, வரலாற்றில் இடம் பிடித்துவிட்டது என்பதுதான்.

ஒன்றிய அரசு நிதி வழங்காத நிலையில் பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டும் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்க மறுத்துள்ளது. இந்நிலையில் கல்வித்துறைக்காக தமிழக முதல்வர் அதிக நிதியாக ரூ.13 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளார். இப்படிப்பட்ட முதல்வரை நாங்கள் கொண்டாடாமல் யார் கொண்டாடுவார்கள். அதற்காகத்தான் இந்த நன்றி அறிவிப்பு விழா ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்துகிறோம். சிலர் இந்த ஓய்வு ஊதிய திட்டம் குறித்து விமர்சிக்கலாம். ஆனால் பலர் இதை பாராட்டுகின்றனர்.

இந்த திட்டம் சிறப்பான திட்டம் என்பதை மறந்துவிடக்கூடாது. ஏற்கனவே ஓய்வு பெற்று பணம் பெற்றவர்கள் கூட, சூப்பர் ஆனுவேஷன் பெற்றவர்கள் திரும்ப இந்த திட்டத்தில் சேர விரும்புவதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. தமிழகத்தில் இப்போது முதல்வர் அறிவித்துள்ள பென்ஷன் திட்டத்தை மற்ற மாநிலங்கள் அறிவிக்க உள்ளன.

அதன்படி பார்த்தால், தமிழ்நாடு தான் ஓய்வு ஊதிய திட்டத்துக்கு முன்னோடியாக இருக்கும். இது குறித்து கரிசனம் காட்டுவோர், பிரதமரிடம் நேரில் சென்று பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த கேட்க வேண்டும். அது முடியுமா என்பதுதான் கேள்வி. அதனால் தமிழகம் தான் ஓய்வு ஊதிய திட்டத்துக்கு முன்னோடி என்பதை மறந்துவிடக்கூடாது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: