கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் கடந்த 2011, 2016, 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர் எஸ்.பி.வேலுமணி. இவர், தொண்டாமுத்தூரில் தனக்கு என தனி கோட்டை கட்டி வைத்துள்ளார். தொகுதியில் திருமண நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, துக்க நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் பங்கேற்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்த தொகுதியில் இருக்கும் ஒவ்வொரு ஓட்டுகளையும் அதிமுகவின் ஓட்டுகளாக மாற்றுவதற்கு பல வேலைகளை பார்த்து வந்தார். இதனால், இவருக்கு தொகுதி மக்கள் மத்தியில் மட்டும் இல்லை, கட்சியிலும் மவுசு அதிகமானது. அதிமுகவில் எடப்பாடிக்கு அடுத்த இடத்தில் இவரு தான் இருக்கிறார். கடந்த சட்டமன்ற தொகுதியில் 1.24 லட்சம் வாக்குகளை பெற்று 41,630 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதாவது 53.89 சதவீதம் வாக்குகளை பெற்றார்.இந்த வாக்குகளை பெற அவர் அப்போது தொகுதி மக்களுக்கு வெள்ளி விளக்கு, ஹாட் பாக்ஸ், பணம் என அள்ளிக்கொடுத்தார். இதனால், ஹாட்ரிக் வெற்றி கிடைத்தது. இந்த தொடர் வெற்றியை கொடுத்த தொகுதியை யாருக்கும் விட்டுக்கொடுக்க அவருக்கு விருப்பம் இல்லை. தவிர, அதிமுகவினர் யாரும் அந்த தொகுதியை கேட்கவும் இல்லை. இதனால், இந்த முறையும் எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியில் தான் போட்டியிடுகிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் கைப்பற்றியதற்கு இவரது பங்கு தான் அதிகமாக இருந்தது. ஆனால், இந்த முறை களநிலவரம் அப்படி இல்லையாம். கோவை மாவட்டத்தில் பாதிக்கு பாதி தொகுதிகள் அதிமுக கையைவிட்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. 10 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு சவால் காத்துக்கொண்டிருக்கிறது.
தவிர, ஹாட்ரிக் வெற்றியை முடித்து தொடர்ந்து 4வது முறையாக தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி பெற எஸ்.பி.வேலுமணி குறி வைத்து இருக்கும் நிலையில், அந்த தொகுதியில் அவரது தோல்விக்கு அதிகளவில் வாய்ப்பு இருப்பதாகவும், கடந்த தேர்தலை போல் 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியாது எனவும் உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இதனால், தொகுதி பக்கம் சரிவர செல்லாமல் இருந்தவர், இப்போது பம்பரமாக சுழன்று வருகிறார்.
மேலும், அம்மா பிறந்த நாளில் தொகுதியில் ஆண்கள், பெண்களுக்கு என தனியாக வாட்ச், பட்டுச்சேலை, வேட்டி, குடை, டிராலி பேக் உள்ளிட்ட 8 பொருட்கள் தர இருக்கிறார். இதுதவிர, தொகுதியில் தனது பலத்தை கண்டுபிடிக்க தனி டீம் வைத்து மொபைல் ஆப் மூலம் சர்வே பணியும் செய்து வருகிறார். தனது தொகுதியில் அதிமுக விசுவாசிகளின் பட்டியல் எடுத்து அந்த குடும்பத்தில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர்.
அவர்களது வாக்குகள் யாருக்கு செல்ல போகிறது. குடும்பத்தில் உள்ள இளைஞர்கள், முதல் முறையாக வாக்கு செலுத்தவுள்ள வாக்காளர் போன்ற அனைத்து தகவலும் சேகரித்து வருகிறார். இந்த பணியும் பாதி முடிந்து நிலையில், தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றியை உறுதி செய்ய 50 ஆயிரம் குடும்பங்களுக்கு 2 கிராம் தங்கம், ரொக்கப்பணம் அளிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தனது பலத்தை காட்ட தொகுதியில் ரூ.150 கோடிக்கு மேல் செலவிட இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால், அந்த தொகுதியை சேர்ந்த அதிமுகவினர் குஷியாகி இருக்கிறார்களாம். கோவை மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் ஆப் மூலம் வெற்றி கணிப்பு தொடர்பாக சர்வே செய்து வருகிறார்கள். இந்த சர்வே அவர்களது கூட்டணிக்கு எவ்வளவு சதவீதம் வெற்றியை தரும் என தெரியாத காரணத்தினால், பரிசுகளை அள்ளி வீச தயாராகி உள்ளனர்.
