சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் 2378.30 கோடி ரூபாய் செலவில் 9 முடிவுற்ற பணிகளையும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 635.30 கோடி ரூபாய் செலவில் 22 முடிவுற்ற பணிகளையும், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் 237.04 கோடி ரூபாய் செலவில் 62 முடிவுற்ற பணிகளையும், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் சார்பில் 174.45 கோடி ரூபாய் செலவில் 27 முடிவுற்ற பணிகளையும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 86.04 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 63 பணிகளையும், திறந்து வைத்தார்.
மேலும், சென்னை மாநகராட்சி சார்பில் 335.62 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 8 புதிய திட்டப் பணிகளுக்கும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 932 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி, சென்னை குடிநீர் வாரியத்தின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 வாகனங்களை அலுவலர்களுக்கு வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மற்றும் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள செருக்கனூர் மற்றும் 114 ஊரகக் குடியிருப்புகளுக்கு 44.58 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தைச் சார்ந்த கோவளம் மற்றும் 10 ஊரகக் குடியிருப்புகளுக்கு 13.62 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் என மொத்தம் 1724 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் 11 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையிலான 7 கூட்டுக் குடிநீர் திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்கு 62.82 கோடி ரூபாய் செலவிலான பாதாள சாக்கடை திட்டம் என மொத்தம் 653 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் 4 லட்சத்து 49 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையிலான 2 பாதாள சாக்கடைத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். 68 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் சோழிங்கநல்லூரில் நாளொன்றுக்கு 36 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்,
வில்லிவாக்கத்தில் 17 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 5 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கொடுங்கையூரில் 45 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்,
மணலி, ஆலந்தூர் (முகலிவாக்கம்), பெருங்குடி (பள்ளிக்கரணை), மற்றும் சோழிங்கநல்லூர் (உத்தண்டி, ஒக்கியம்-துரைப்பாக்கம்) ஆகிய மண்டலங்களில் 188 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்,
மாதவரம், தண்டையார்பேட்டை, அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் உள்ள நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பொருட்டு 106 கோடி 42 லட்சம் செலவில், பாடி மேம்பாலத்திலிருந்து கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை மாற்றியமைக்கப்பட்ட பிரதான கழிவுநீர் உந்து குழாய்கள். தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் 134 கோடி 33 லட்சம் செலவில்,
கழிவுநீர் உந்து நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்ட பிரதான கழிவுநீர் உந்து குழாய்கள் உள்ளிட்ட கழிவுநீர் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் என மொத்தம் 635 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 22 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். மாதவரம் மண்டலம், விநாயகபுரத்தில் 1.47 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம், எம்.ஆர்.எச். சாலையில் 2.27 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட மாதவரம் பேருந்து நிலையம், தேனாம்பேட்டை மண்டலம், காதர் நவாஸ் கான் சாலையோரத்தில் 19.81 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாதசாரிகளுக்கான நடைபாதை வளாகம்.
தியாகராயநகர் புதிய போக் சாலை, பெருங்குடி மண்டலம், நாராயணபுரம் ஆகிய இடங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை பள்ளி என 12 பள்ளிகளில் ரூ.19.56 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 பள்ளிக் கட்டிடங்கள், மணலி, மாதவரம், அம்பத்தூர் ஆகிய மண்டலங்களில் ரூ.2.64 கோடி செலவில் புதிய 3 வார்டு அலுவலகங்கள் என மொத்தம் 86.04 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 63 திட்டப்பணிகளை மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் திறந்து வைத்தார்.
சர்தார் பட்டேல் சாலை-வேளச்சேரி பிரதான சாலை சந்திப்பிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 200 அடி சாலையில் 310 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் என மொத்தம் 335.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
புழலில் செயல்பட்டு வரும் நாளொன்றுக்கு 300 எம்எல்டி கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை 555 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 310 எம்எல்டி கொள்ளளவு கொண்ட நிலையமாக மறுசீரமைத்து மேம்படுத்தும் பணிகள், 376 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அடையாறு மண்டலம், பள்ளிப்பட்டு மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் தொடர்ச்சியான குடிநீர் விநியோகம் செயல்படுத்தும் பணிகள் என மொத்தம் 932 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
