சென்னை: மலேசியாவில் பாஸ்போர்ட்டை சென்னை கல்லூரி மாணவிகள் தவறவிட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவியால் போர்க்கால அடிப்படையில் சென்னை திரும்ப நடவடிக்கை எடுத்ததற்கு மல்லை சத்யா நன்றி தெரிவித்துள்ளார். திராவிட வெற்றிக் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் மல்லை சி.ஏ.சத்யா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை எம்ஓபி வைஷ்ணவ பெண்கள் கல்லூரி மாணவிகள் 30 பேர் கடந்த 30ம்தேதி வெள்ளிக்கிழமை இரவு 11,45 மணியளவில் ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசியாவிற்கு கல்விச் சுற்றுலா சென்று உள்ளனர்.
பல்கலைக்கழக கருத்தரங்கம் முடிந்து நேற்று முன்தினம் இரவு மலேசிய நேரப்படி இரவு 9,30 மணியளவில் சென்னை திரும்ப திட்டமிட்டு இருந்த நிலையில் மாணவி காவியா சரத் எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவி தனது பாஸ்போர்ட்டை தவற விட்டு பரிதவித்து கொண்டு இருந்தார். அவரின் நிலை குறித்து அதே கல்லூரியில் முனைவர் பட்டம் பயிலும் மாணவர் பிரேனேஷ் எனக்கு தகவல் சொல்லி உதவிட கோரினார். இதை உடனடியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அடுத்த சில நிமிடங்களில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மலேசிய நாட்டில் இயங்கும் இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்து பாஸ்போர்ட்டை தவற விட்ட மாணவி காவியா சரத்துக்கு உதவிட அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இந்தியத் தூதரக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மாணவி காவியா சரத்தை தொடர்பு கொண்டு அலுவலக நடைமுறைகளை முடித்து 4 மணி நேரத்தில் புதிய பாஸ்போர்ட்டை வழங்கி தமிழ் நாடு திரும்ப இந்திய தூதரகம் உதவியுள்ளது. பல்வேறு பணிகளுக்கு இடையேயும் மாணவி தாயகம் திரும்ப உதவிய முதல்வருக்கும், இந்திய தூதரகம் மற்றும் ஒரு வழி பயணச் சீட்டு கட்டணம் இல்லாமல் வழஙகிய ஏர் ஏசியா நிறுவனத்துக்கும், திமுக அயலகத் தமிழர் நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
