ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஐடி விங் மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தை மாநில செயலாளர் சாய்பாபா தொடங்கி பேசினார். அப்போது, சட்டமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் உள்ள நிர்வாகிகள் பூத் வாரியாக தேர்தல் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் சதிஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீரென கூட்டத்திற்கு வந்து, ஐடி விங் பொதுசெயலாளர் சாய்பாபாவிடம் வாக்குவாதம் செய்தனர்.
ஆரணியில் உள்ள நிர்வாகிகளுக்கும் மாவட்ட பொதுசெயலாளர் என்ற முறையில் எனக்கும் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை? என்று கூறி வாக்குவாதம் செய்தனர். பாஜக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்காமல் கூட்டம் நடத்துவதா எனக்கேட்டனர். அதற்கு பதிலளித்த மாநில ஐடி விங் செயலாளர் சாய்பாபா, மாவட்ட தலைவரிடம் அனுமதி பெற்று கூட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை என்றார். அதற்கு சதிஷ், ஆரணி தொகுதி வாக்குச்சாவடி நிலை முகவர் பொறுப்பாளர் நான்தான். எனக்கும் மாவட்ட தலைமைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஆனால், ஐடிவிங் மாநிலச் செயலாளர் என்பதால் நீங்கள் தன்னிச்சையாக செயல்படுவதா என கூறி அவரது ஆதரவாளர்கள் நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். இதுதொடர்பாக கட்சியின் தலைமைக்கு புகார் தெரிவிக்கப்படும் எனக்கூறிவிட்டு சதிஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர். இந்த சம்பவத்தால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
