கந்தர்வகோட்டை, பிப்.5: வெள்ளாளவிடுதி ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உடனுக்குடன் நெல்மூட்டைகளை எடுத்து செல்ல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளவிடுதி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விவசாயிகள் பயிர்செய்து தற்சமயம் அறுவடை ஆகும் சம்பா நெல்களை அரசு நேரடி நெல் கொள்முதல் செய்து வருகிறார்கள்.
விவசாயிகள் அளிக்கும் நெல்மூட்டைகளுக்கு அரசு நிர்ணயத்துள்ள உரிய தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கபடுகிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்மூட்டைகளை தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் உடனடியாக நெல்மூட்டைகளை ஏற்றி அதற்குறிய குடோனுக்கு அனுப்பவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள்.
மேலும் விவசாயிகள் கூறும்போது நெல்மூட்டைகளை நேரடி கொள்முதல்நிலையத்தில் விற்பனை செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலர் சிட்டா அடங்கல் வழங்க வேண்டிய நிலையில் கிராம நிர்வாக அலுவலர் தொடர் விடுப்பில் இருப்பதால் நிலையான பொறுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள். மேலும் விவசாயிகளிடம் இருந்து கால தாமதம் இல்லாமல் நெல்களை கொள்முதல் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
