கிங்டாவ்: சீனாவின் கிங்டாவ் நகரில் துவங்கிய ஆசிய குழு சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி, மியான்மரை, 5-0 என்ற கோல் கணக்கில் அட்டகாசமாக வீழ்த்தியது. சீனாவின் கிங்டாவ் நகரில் ஆசிய குழு சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டிகள் துவங்கி உள்ளன. இதில், குரூப் ஒய் மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, மியான்மர் அணிகள் மோதின.
ஒற்றையர் பிரிவு மகளிர் போட்டியில் இந்திய வீராங்கனை தன்வி சர்மா, 32 நிமிடங்களில் மியான்மரின் தெட் ஹிடார் துஷாரை, 21-13, 21-16 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். அதன்பின், இந்தியாவின் ரக்சிதா ஸ்ரீ சந்தோஷ் ராம்ராஜ், மியான்மரின் ஈய்ன்ட் சிட் பூவை, 21-12, 21-6 என்ற நேர் செட்களில் எளிதில் வென்றார். அடுத்து நடந்த போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோட், மியான்மரின் லில் லின் ஹிடெடை 21-19, 21-12 என்ற நேர் செட்களில் வென்றார்.
மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் பிரியா கொஞ்செங்பாம், ஸ்ருதி மிஸ்ரா இணை, மியான்மரின் சு லாட், தெட் ஹிடார் துஷார் இணையை, 21-15, 21-16 என்ற நேர் செட்களில் வெற்றிவாகை சூடினர். கடைசியாக நடந்த இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ட்ரீஷா ஜாலி, காயத்ரி கோபிசந்த் இணை, ஹிடெட், பூ இணையை, 21-8, 21-6 என்ற நேர் செட்களில் வென்று அசத்தினர் இதன் மூலம் ஒரு போட்டியில் கூட விட்டுத் தராமல் 5-0 என்ற கணக்கில் இந்தியா மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இன்று நடக்கும் 2வது குழு போட்டிகளில் தாய்லாந்தை இந்திய மகளிர் அணி எதிர்கொள்ள உள்ளனர்.
