புதுடெல்லி: அமெரிக்காவின் பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்களால் ஒன்றிய பாஜக அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி, பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே சமீபத்தில் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்தியத் தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு அறிவித்திருந்தாலும், இதன் பின்னணியில் மிகப்பெரிய முறைகேடு ஒளிந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. முன்னதாக, வேளாண் மற்றும் பால் பண்ணைத் துறைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி அளித்திருந்தார்.
ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க எரிசக்தி மற்றும் வேளாண் பொருட்களை இந்தியா வாங்கும் என்று கூறியது விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி அமெரிக்காவின் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அமெரிக்காவின் பாலியல் குற்றவாளி ‘எப்ஸ்டீன்’ தொடர்பான ரகசிய ஆவணங்கள் மற்றும் அதானி குழுமம் மீதான விசாரணைக் கோப்புகளை வைத்து ஒன்றிய அரசு மிரட்டப்படுவதாக அவர் தெரிவித்தார். ‘பிரதமர் சமரசம் செய்து கொண்டு செயல்படுகிறார்’ என்றும், ‘தனிப்பட்ட விவரங்களை வைத்து வெளிநாட்டு உளவு அமைப்புகள் பிளாக் மெயில் செய்வதால் விவசாயிகளின் நலன்களைப் பிரதமர் மோடி அடகு வைத்துள்ளார்’ என்று ராகுல் காந்தி சாடினார்.
ராகுல் காந்தியின் இந்தப் புகாரைத் தொடர்ந்து, ேநற்றும், இன்றும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் இந்த ரகசிய ஆவணங்கள் மூலம் இந்தியத் தலைவர்களை மிரட்டிப் பணிய வைக்கும் வாய்ப்பு இருப்பதாக எழுந்துள்ள புகார், தேசப் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு உளவு அமைப்புகள் இத்தகைய கோப்புகளை வைத்து இந்தியக் கொள்கை முடிவுகளில் குறுக்கீடு செய்வதாகவும், இதனாலேயே அமெரிக்கப் பொருட்களை வாங்க இந்தியா சம்மதித்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. பிரதமர் மோடியின் ‘இந்தியா முதலிடம்’ என்ற முழக்கம் வெறும் நாடகம் என்றும், உண்மையில் அவர் வெளிநாட்டு அழுத்தங்களுக்குப் பணிந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடகு வைத்து விட்டதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய அரசியலில் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பி உள்ள ‘எப்ஸ்டீன்’ பைல்ஸ் என்றால் என்ன? அதன் பின்னணி குறித்த பரபரப்பு தகவல்களும் வெளியாகி உள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருக்கு எதிராக 2015ம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண் விர்ஜினியா கிஃபெர் என்பவர் தொடர்ந்த அவதூறு வழக்கின் ஒரு பகுதியாக, ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்கள் சீல் வைக்கப்பட்டிருந்தன. இந்த வழக்கில் எப்ஸ்டீனின் நெருங்கிய கூட்டாளியான கிஸ்லேன் மேக்ஸ்வெல் என்பவருக்குத் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த ரகசிய ஆவணங்களை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட நியூயார்க் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து 2024ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு தொடக்கம் வரை பல்வேறு கட்டங்களாக இந்த ஆவணங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 150க்கும் மேற்பட்ட முக்கிய நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள், ஐரோப்பிய அரச குடும்பத்தினர், பெரும் தொழிலதிபர்கள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. ‘லொலிட்டா எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் எப்ஸ்டீனின் தனி விமானத்தில் பயணம் செய்தவர்களின் விவரங்கள், மின்னஞ்சல் உரையாடல்கள் மற்றும் போலீசார் விசாரணை அறிக்கைகள் எனப் பல அதிரடித் தகவல்கள் இந்த ரகசியக் கோப்புகளில் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவரும் குற்றவாளிகள் என்று கருத முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த ஆவணங்களில் உள்ள பெயர்கள் மூன்று முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, எப்ஸ்டீனின் குற்றச் செயல்கள் பற்றி ஏதும் அறியாமல் அவரோடு சமூக ரீதியாகப் பழகிய நண்பர்கள். இரண்டாவதாக, எப்ஸ்டீனின் பாலியல் கடத்தல் கும்பலால் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட பெண்கள். மூன்றாவதாக, எப்ஸ்டீனின் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தகவல்கள் உலக நாடுகளின் அதிகார மையங்களில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்தத் தகவல்கள் தற்போது வெளியாகியிருப்பது, பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
தனது அபரிமிதமான செல்வத்தைப் பயன்படுத்தி உலகத் தலைவர்களைத் தனது பிடியில் வைத்திருந்த எப்ஸ்டீனின் அச்சுறுத்திப் பணிய வைக்கும் தந்திரங்கள் இந்த ஆவணங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. தற்போது இந்த ஆவணங்களின் அடிப்படையில் சர்வதேசப் புலனாய்வு அமைப்புகள் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதிகார மட்டத்தில் உள்ளவர்களின் உண்மை முகத்தைத் திரைவிலக்கிக் காட்டும் இந்த எப்ஸ்டீன் ரகசியக் கோப்புகள், சர்வதேச அரசியலில் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது. இந்தச் சூழலில், அமெரிக்காவின் எப்ஸ்டீன் ரகசிய ஆவணங்கள் இந்திய அரசியலில் இன்று மிகப்பெரிய புயலை கிளப்பியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து, ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக அதிரடிப் புகார்களை முன்வைத்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள இந்த ரகசிய ஆவணங்களை வைத்துக்கொண்டு, ஒன்றிய அரசை அமெரிக்க உளவு அமைப்புகள் மிரட்டி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். இத்தகைய சர்வதேச அழுத்தங்களுக்குப் பணிந்து செயல்படுவதாலேயே, இந்திய விவசாயிகளின் நலன்களைப் பாதிக்கும் வர்த்தக ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி அவசர அவசரமாகக் கையெழுத்திட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்த எப்ஸ்டீன் கோப்புகள் வெறும் அமெரிக்க விவகாரம் மட்டுமல்ல, இது உலக அளவில் தலைவர்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் ஒரு கருவியாக மாறியுள்ளது என்று ராகுல் காந்தி பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். ‘வெளிநாட்டு உளவு அமைப்புகள் இத்தகைய ரகசியக் குறிப்புகளை வைத்து இந்தியக் கொள்கை முடிவுகளில் குறுக்கீடு செய்கின்றன’ என்று அவர் சாடியுள்ளார்.
அதானி குழுமம் மீதான அமெரிக்க விசாரணையும், முன்னாள் ராணுவ தளபதியின் புத்தக முடக்கமும் இந்தச் சதியின் ஒரு பகுதியே என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தேசத்தின் இறையாண்மையை விடத் தனிப்பட்ட நலன்களையே முக்கியமாகக் கருதும் பாஜக அரசின் செயல்பாடு, இந்திய ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக பிரியங்கா காந்தி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
