வாஷிங்டன்: ஆஸ்திரேலியாவின் குயிண்டாலப் என்ற கடற்கரை சுற்றுலா தலம் உள்ளது. இங்கு ஆஸ்டின் ஆப்பல்பீ (13) என்ற சிறுவன், தனது தாய் ஜோன் (47) மற்றும் தம்பி, தங்கையுடன் வந்தார். பின்னர் அனைவரும் துடுப்பு படகில் கடலுக்கு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக பலத்த காற்று வீசியது. இதில், அவர்கள் பயணம் செய்த படகு திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடுக்கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது. அப்போது சிறுவன் ஆஸ்டின், சற்றும் பயப்படாமல் ராட்சத அலைகளுக்கு இடையே, சுறாக்கள் உள்ள பகுதியில் சுமார் 4 மணி நேரம் இடைவிடாமல் நீந்தி கரையை அடைந்தான்.
உடல் சோர்ந்து மயங்கும் நிலையிலும், அங்கிருந்தவர்களிடம் தனது குடும்பத்தினர் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரிவித்தான். உடனடியாக விரைந்து வந்த மீட்பு குழுவினர், ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த அவனது தாய் மற்றும் குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். தன் உயிரை பணயம் வைத்து குடும்பத்தை மீட்ட இந்த சிறுவனை உலகம் முழுவதும் ‘அதிசய பிறவி’ என பாராட்டி வருகின்றனர்.
