சென்னை: கல்வியாளர் முனைவர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். முதுபெரும் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்(95) அனைவராலும் அறியப்பட்டவர். இவர் கோவையில் ஆசிரியராக தனது பணியைத் தொடங்கி, பள்ளித் தலைமை ஆசிரியராக உயர்வு பெற்று பணியாற்றி பின்னர் சென்னையில் குடியேறினார். அதற்கு பிறகு கல்விப்பணியில் தனது வாழ்நாளை செலவிட்டவர். இவரின் பணிக்காலத்தில் மாணவர்களின் உரிமை, கல்வித் தரம் குறித்து குரல் ெகாடுத்து வந்தவர். கடந்த 2009ம் ஆண்டு ஒன்றிய அரசு அறிமுகம் செய்த கட்டாய கல்வி உரிமைச் சட்டம்(RTE) தெரிவித்த அம்சங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டியவர். அனைவருக்குமான சமமான கல்வி வேண்டும்.
பள்ளிகள் குழந்தைகள் மாணவர்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று வகையில் அருகமை பள்ளிகள் குறித்தும், உடல் சார்ந்த மனம் சார்ந்த பயிற்சிகளையும் கல்வியில் சேர்க்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தவர். அவரின் கொள்கையில் இறுதி வரையில் உறுதியாக இருந்தார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலிவால் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 12 மணி அளவில் அவர் காலமானார். முன்னதாக தான் இறந்த பிறகு தனது உடலை மருத்துவ ஆய்வுக்காக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
அதன்படி அவரின் உடல் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் மறைவு குறித்து கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் மறைவு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது: மூத்த கல்வியாளர் முனைவர் சு.சீ.ராஜகோபாலன் அவர்களின் மறைவு கல்வித்துறைக்கு ஒரு பேரிழப்பு.
முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட சமச்சீர் கல்விக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தவர். தேர்வு என்பது கற்றலை மட்டுமே மதிப்பிடுவது இல்லை; கற்பித்தலை மதிப்பிடுவது என்பதை வலியுறுத்தியவர். முன்னோடித் திட்டங்களுக்கு வழிகாட்டும் அதேவேளையில் விமர்சிக்கவும் தயங்காதவர், மாணவர்களின் நலன் விரும்பி. அய்யா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துகிறோம். இவ்வாறு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
