திருமலை: நாட்டிலேயே முதல்முறையாக விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயில் பாதுகாப்பு படை போலீசார் ரோபோ போலீசை அறிமுகப்படுத்தினர். ஏ எஸ் ஐ அர்ஜுன் என பெயரிடப்பட்ட இந்த ரோபோ ரயில் நிலையத்தில் தீ மற்றும் புகையைக் கண்டறிந்து பயணிகளை எச்சரிப்பதோடு ஒவ்வொரு நாளும் ரயில் நிலையத்தில் வருபவர்களின் புகைப்படங்களை எடுத்து சந்தேக நபர்களையும் ரயில் நிலையத்திற்கு அடிக்கடி வருபவர்களையும் அடையாளம் கண்டு அவர்களின் தகவல்களை அதிகாரிகளுக்கு அனுப்பும்.
அவ்வாறு விசாகப்பட்டினம் நிலையத்தில் சுற்றித் திரிந்த இரண்டு பழைய குற்றவாளிகளை ரோபோ ஏ.எஸ்.ஐ. அர்ஜுன் கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தது. இருவர் மீது ஒடிசா மாநிலம் ராயகடா உட்பட பல காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ள அடப்பா சிவா மற்றும் பங்காரு என்ற தகவலை கண்டதும் ஜிஆர்பி மற்றும் ஆர்பிஎஃப் போலீசார் சோதனைகளை மேற்கொண்டு அவர்களை கைது செய்தனர். ரோபோவின் செயலை கண்டு அங்கிருந்த போலீசார் மட்டுமின்றி பயணிகளும் ஆச்சரியமடைந்தனர்.
