திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். சபாநாயகரின் இருக்கையை நோக்கி காங்கிரஸ் உறுப்பினர்கள் பாய்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள சட்டசபை இன்று காலை கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை முடக்க முதல்வர் அலுவலகம் முயற்சித்து வருகிறது. இதை கண்டித்து 2 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆகவே சபை நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து பேனர்களை கையில் ஏந்தி கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் சபாநாயகர் ஷம்சீரின் இருக்கைக்கு அருகே வந்து கோஷமிட்டனர். பதிலுக்கு அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் தோஷமிட்டனர். சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு விசாரணையை முடக்க எதிர்க்கட்சித் தலைவர் முயற்சிக்கிறார் என்று அமைச்சர் ராஜேஷ் கூறினார். காங்கிரஸ் கட்சியினர் தான் சபரிமலை தங்கத்தை திருடினர் என்று அமைச்சர் சிவன்குட்டி கூறினார். இதற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த அமளிக்கு இடையேயும் கேள்வி நேரத்தை தொடர சபாநாயகர் ஷம்சீர் அனுமதித்தார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அன்வர் சாதத், முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த இப்ராகிம் குட்டி ஆகியோர் சபாநாயகரின் இருக்கையை நோக்கி பாய்ந்தனர். உடனடியாக சபை காவலர்கள் இருவரையும் தடுத்தனர். இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சபாநாயகர் ஷம்சீர் இருக்கையை விட்டு எழுந்து சென்றார். சிறிது நேரம் கழித்து சபாநாயகர் ஷம்சீர் மீண்டும் அவைக்கு வந்தார். அப்போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஷம்சீர் அறிவித்தார்.
