அரியலூர்: ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாவட்ட செயலாளர் விஜய பார்த்திபன் உள்பட 300 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி அரியலூர் திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசியதாவது:
மோடி அரசு தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. ஒன்றிய அரசு ஒரு பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில், தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கிற எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இதற்கு, எதிர்க்கட்சி தலைவர் வரவேற்பு கொடுக்கிறார். ஜால்ரா போடுவதற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஒன்றிய அரசுகளை எதிர்த்து, மாநில சுயாட்சிக் கொள்கை விட்டுக் கொடுக்காமல் இருந்தனர்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழையாமல் தடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதைப் பின்பற்றி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீட் தேர்வு தமிழகத்தில் உள்ளே நுழையாமல் வைத்திருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ‘நீட்’ தேர்வும், உதய் மின் திட்டமும் வந்தது. இவ்வாறு அவர் பேசினார்.
