மாம்பழம் சின்னம் யாருக்கு? ஐகோர்ட்டில் நாளை விசாரணை

சென்னை: பாமகவுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து கட்சி நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. பாமக கட்சியின் உரிமை தொடர்பாக அந்த கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும் இடையில் மோதல் நடந்து வரும் சூழலில், கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தை ரத்து செய்து, தனது முகவரிக்கு கடிதம் அனுப்ப உத்தரவிடக் கோரி கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கடந்த 2025 மே மாதமே அன்புமணியின் பதவிக்காலம் முடிந்த நிலையில், கட்சியின் தலைவராக நீடிப்பதாக போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்.

கட்சி நிறுவனர் என்ற முறையில் தனது அங்கீகாரம் இல்லாமல் சட்டவிரோதமாக கட்சி கூட்டங்களை நடத்தி அன்புமணி கட்சியின் உரிமையை கோர முடியாது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்க கூடாது. சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தனக்கு தான் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும். டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம், மாம்பழ சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் முடக்கும் என உத்தரவாதம் அளித்திருந்தது. ஆனால் இதுநாள் வரை சின்னத்தை முடக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Related Stories: