பல்லேகலே: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒன்டே, 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒன்டே போட்டியில் இங்கிலாந்து அணி 2:1 என்ற கணக்கில் தொடர கைப்பற்றியது. முதல் டி20 போட்டி பல்லேகலேவில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி 16.2 ஓவரில் 133 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக குசல் மென்டிஸ் 44 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத், சாம் கரன் தலா 3 விக்கெட் எடுத்தனர். அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து, மழை காரணமாக டக்வொர்க் முறைப்படி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1:0 என முன்னிலை வகிக்கிறது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சால்ட் 46 ரன் அடித்தார். ஆட்டநாயகன் விருது இங்கிலாந்து வீரர் அடில் ரஷீத்திற்கு (4 ஓவர், 19 ரன், 3 விக்கெட்) வழங்கப்பட்டது. இப்போட்டியில் இங்கிலாந்து பவுலர் சாம் கரன் 16வது ஓவரில் தசுன் சங்கா, மகேஷ் தீக்ஷனா, மதிஷா பதிரனா ஆகியோரது விக்கெட்டை அடுத்தடுத்து எடுத்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதன்மூலம் இங்கிலாந்து டி20 கிரிக்கெட்டில் 2வது ஹாட்ரிக் விக்கெட் சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் சாம் கரன். இதற்கு முன்பு அந்த அணியின் மாஜி பவுலர் ஜோர்டான் 2024 உலக கோப்பை டி20 தொடரில் அமெரிக்கா அணிக்கு எதிராக ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
